ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், 7ம் தேதி பிற்பகலில், பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என்று, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டிருந்தார். வராத ஆசிரியர்களுக்கு, தற்செயல் விடுப்பு எடுத்ததாக, வருகை பதிவேட்டில் பதிவு செய்யும்படி தெரிவித்திருந்தார். பெரும்பாலான ஓட்டுசாவடிகளில், 7ம் தேதி அதிகாலை வரை ஆசிரியர்கள் பணியாற்றினர். இந்நிலையில் பள்ளிக்கு வர வேண்டுமென்ற சி.இ.ஓ., உத்தரவுக்கு, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் கதிரவனிடம் முறையிட்டனர். இதையடுத்து சி.இ.ஓ., உத்தரவை கலெக்டர் கதிரவன் ரத்து செய்துள்ளார். மேலும், 7ம் தேதி பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு, அயல் பணி என்று பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் சி.இ.ஓ., உத்தரவை மதித்து, பள்ளிக்கு வந்த ஆசிரியர்களுக்கு, வேறொரு நாளில் விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE