கிருஷ்ணகிரி: ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது குறித்து, கிருஷ்ணகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஊட்டமேற்றிய தொழு உரம் உபயோகிப்பதால், சத்துக்கள் எளிதில் ஆவியாவது தடுக்கப்பட்டு பயிருக்கு முழுமையாக கிடைக்கிறது. வேர்கள் நன்றாக வளர்ந்து, மழை கிடைக்க தாமதம் ஆனாலும், மானாவாரி பயிர்கள் வறட்சியை தாங்கி நிற்கும். மானாவாரி பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு பரிந்துரைக்கப்படும் அளவு, மணிசத்து கொடுக்கும் சூப்பர் பாஸ்பேட் உரத்தை நன்கு மக்கிய தொழு உரத்துடன், 1:6 என்ற அளவில் நன்கு கலந்து, கட்டிகள் இல்லாதவாறு தயார் செய்ய வேண்டும். பின் காற்று மற்றும் மழை நீர் புகாமல் மேடான பகுதியில் இட்டு அதன் மேல்புறத்தை பச்சை சாணி கரைத்து தெளித்தும், மெழுகு போல் மேலடுக்கு பூசியும் வெளிக்காற்று உள்ளே வராமலும், உள் காற்று வெளியே செல்லாதவாறும் மூட்டம் போட வேண்டும். பின், 30 நாட்கள் கழித்து உரத்தை எடுத்து பயிருக்கு பரிந்துரைக்கப்படும் அளவு தழைச்சத்து உரம் கொடுக்கக்கூடிய யூரியாவையும், சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய பொட்டாஷ் உரத்தையும் சேர்த்து, நன்கு கலந்து விதைப்பின் போது அடியுரமாக இட வேண்டும். பயிருக்கு ஏற்ற வகையில், கார் பருவ நெல் ஏக்கருக்கு, 125 கிலோ, மானாவாரி சோளத்துக்கு ஏக்கருக்கு, 50 கிலோ, இறவை சோளத்துக்கு ஏக்கருக்கு, 113 கிலோ, இறவை கம்பு ஏக்கருக்கு, 88 கிலோ, மானாவாரி ராகி ஏக்கருக்கு, 50 கிலோ, இறவை ராகி ஏக்கருக்கு, 75 கிலோ, மானாவாரி துவரை ஏக்கருக்கு, 63 கிலோ, இறவை ஏக்கருக்கு, 125 கிலோ, இதர பயறு வகைகள் மானாவாரி ஏக்கருக்கு, 63 கிலோ, இறவை ஏக்கருக்கு, 125 கிலோ என்ற வீதத்தில் சூப்பர் பாஸ்பேட் உடன், 6 மடங்கு தொழு உரத்துடன் கலந்து ஊட்டமேற்றி பயிருக்கு இடுவதால், 10ல் இருந்து, 15 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெறலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE