மதுரை : ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் மேகமலை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை புலிகள் காப்பகமாக அரசு அறிவித்ததற்கு தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
ஆண்டிபட்டி அருகே காந்திபுரம் ஆண்டி தாக்கல் செய்த பொதுநல மனு:மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் எங்கள் கிராமம் உள்ளது. பல தலைமுறைகளாக விவசாயம் செய்கிறோம். அரசு பட்டா வழங்கியுள்ளது. சட்டவிரோதமாக யாரும் ஆக்கிரமிக்கவில்லை. ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் மேகமலை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை புலிகள் காப்பகமாக பிப்.,8 ல் தமிழக அரசு அறிவித்தது. இதனால் எங்கள் பகுதியைச் சுற்றிலும் உள்ள 14 கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.இப்பகுதியில் புலிகள் நடமாட்டம் உள்ளது என்பதற்கு கால்தடம் எதுவும் இல்லை. அறிவிப்பதற்கு முன் முறையாக ஆய்வு செய்யவில்லை. வன உரிமைச் சட்டப்படி இப்பகுதியில் வாழ எங்களுக்கு உரிமை உள்ளது. எவ்வித அறிவிப்பும் இன்றி அரசுத் தரப்பில் எங்களை வெளியேற்ற முயற்சிக்கின்றனர்.புலிகள் காப்பகமாக அறிவித்த அரசாணைக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். எங்கள் பகுதியில் புலிகள் உள்ளதா என்பதை மறு சர்வே மூலம் உறுதி செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஆண்டி மனு செய்தார்.நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஏப்.,17 க்கு ஒத்திவைத்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE