சென்னை: ''தமிழகத்தில் கொரோனா வைரஸ் உருமாறவில்லை; முக கவசம் அணிந்தால் மட்டுமே, தொற்றை கட்டுப்படுத்த முடியும்,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் உருமாறி உள்ளதா என கண்டறிய, 20 மாதிரிகளை, பெங்களூரில் உள்ள, 'இன்ஸ்டன்' என்ற நிறுவனத்திற்கு, தமிழக சுகாதாரத் துறை அனுப்பியது. அதில், கொரோனா வைரஸ் உருமாறவில்லை என்பது தெரிய வந்து உள்ளது.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது:உலகின் பல்வேறு நாடுகளில், கொரோனா வைரஸ் உருமாறியுள்ளது. தமிழகத்திலும் உருமாறியுள்ளதா என கண்டறிய, 20 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அந்த மாதிரிகளில், வைரஸ் உருமாறவில்லை.ஏற்கனவே உள்ள வைரசின் தன்மை தான் உள்ளது என, தெரிய வந்துள்ளது.

எந்தவொரு வைரஸ் இருந்தாலும், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே, தொற்று பரவும் வேகத்தை குறைக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.