சென்னை: தமிழகத்திற்கே ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள சூழலில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் சென்னையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ ஆக்சிஜன் தேவை உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு உத்தரவின்படி சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஐனாக்ஸ் ஆலை தான் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது.

தமிழகத்தில் தற்போது 79 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஆனால், ஆந்திராவில் 53 ஆயிரம் பேரும், தெலுங்கானாவில் 42 ஆயிரம் பேரும் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் அதிகளவு பாதிப்பு இருந்து வரும் சூழலில், இங்கிருந்து ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பியது ஏன் என பலரும் கேள்வி எழுப்பினர். இது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'அவசர தேவைகளின் போது இதுபோல அண்டை மாநிலங்களுக்கு உதவுவது வழக்கம் தான். மற்ற மாநிலங்களில் இருந்து ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் நமக்கு திருப்பி விடப்படுகின்றன,' எனக் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE