புதுடில்லி :ஆக்சிஜன் வினியோகம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்துக்கு ஆலோசனை கூறும் பொறுப்பில், மூத்த வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே நியமிக்கப்பட்டதற்கு விமர்சனம் எழுந்ததை அடுத்து, அந்த பொறுப்பிலிருந்து அவர் விலகினார்.
ஆக்சிஜன், தடுப்பூசிகள், மருந்துகள் வினியோகம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ, 'அமிகஸ் கியூரி'யாக செயல்பட, மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேயை, நீதிபதிகள் நியமித்தனர். இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நடந்தது.
அப்போது, ஹரீஷ் சால்வே தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:இந்த வழக்கில், என்னை அமிகஸ் கியூரியாக நியமித்ததற்கு, வழக்கறிஞர்கள் சிலர் உள்ளர்த்தம்
கற்பிக்கின்றனர். எனக்கு தலைமை நீதிபதியை, பள்ளிக் காலத்திலிருந்தே தெரியும் என்ற நிழலின் கீழ், இந்த முக்கியமான வழக்கு விசாரிக்கப்படுவதை, நான் விரும்பவில்லை.
அதனால், அமிகஸ் கியூரியாக செயல்பட விரும்பவில்லை. அந்த பொறுப்பிலிருந்து விலகுகிறேன். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். சால்வேயின் கோரிக்கையை ஏற்று, அமிகஸ் கியூரி பொறுப்பிலிருந்து அவரை விடுவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE