ஈரோடு : 'ஈ.வெ.ரா., மண்' என்று கூறப்படும், ஈரோடு மாவட்டத்தில், தி.மு.க.,வின் மூத்த பெண் தலைவரை வீழ்த்தி, பா.ஜ., வெற்றி பெற்றது, அக்கட்சியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.,வுக்கு கிடைத்த தொகுதிகளில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி முக்கியமானது. ஈரோடு மாவட்டத்தில், பா.ஜ.,வுக்கு செல்வாக்கு கிடையாது. எனவே, மொடக்குறிச்சியில் பா.ஜ., வெற்றி பெற இயலாது என்றே, அனைவரும் கருதினர். மேலும், தி.மு.க., சார்பில், மூத்த தலைவரான, சுப்புலட்சுமி ஜெகதீசன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இந்த சூழ்நிலையில், ஈ.வெ.ரா., பிறந்த ஈரோடு மாவட்டத்தில், பா.ஜ.,வை வெற்றி பெற வைக்க வேண்டும் என, பா.ஜ., தேசிய இளைஞர் அணி துணைத் தலைவர் முருகானந்தம் தலைமையிலான குழுவினர், அமைதியாக தேர்தல் பணிகளை துவக்கினர். முதலில், கூட்டணி கட்சிகளின் ஓட்டுகளை இழுக்க, அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி, தங்களுக்கு ஒத்துழைக்க வைத்தார்.

அதன்பின், தி.மு.க.,வின் முக்கிய புள்ளிகளை வளைத்து, அமைதியாக இருக்க வழி செய்தார். இதற்கு பலன் கிடைத்துள்ளது. யாருமே எதிர்பாராத வகையில், மொடக்குறிச்சி தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் சரஸ்வதி, 281 ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., வேட்பாளரை வீழ்த்தி, ஈ.வெ.ரா., பிறந்த மண்ணில் தாமரையை மலர செய்துள்ளார்.