புதுடில்லி :டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பெறும், நிழல் உலக தாதா சோட்டா ராஜன் இறந்துவிட்டதாக, தகவல் பரவியது. இதை, மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில், நிழல் உலக தாதாவாக செயல்பட்டவர், சோட்டா ராஜன், 62. போலீசார் தேடியதால், தலைமறைவான அவர், 2015ல் இந்தோனேஷியாவின் பாலியில் கைதானார். பின், இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.
மும்பையில் ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த வழக்கில், அவருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது.டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்ட அவர், சமீபத்தில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளானார். 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, இதய பாதிப்பு, நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
இதற்கிடையே, சோட்டா ராஜன் கொரோனாவால் பலியானதாக, தகவல் பரவியது. அதை மறுத்துள்ள எய்ம்ஸ் நிர்வாகம் மற்றும் போலீசார், அவர் உயிருடன் இருப்பதாகவும், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE