புதுடில்லி: இரக்கமற்ற கொரோனாவின் இரண்டாம் அலையில் நாடு சிக்கிக்கொண்டிருக்கும் வேளையில் சி.பி.எஸ்.இ., 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதற்கான சாத்தியம் தென்படவில்லை என கல்வி அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.
சி.பி.எஸ்.இ., 12-ம் வகுப்பு தேர்வுக்கு சுமார் 12 லட்சம் மாணவர்கள் நாடு முழுவதும் பதிவு செய்துள்ளார்கள். கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக கடந்த ஆண்டு அவர்களில் பாடத்திட்டம் 30% குறைக்கப்பட்டது. அவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் மாதம் நடைபெற்றது. எழுத்தேர்வு மே 4 முதல் ஜூன் 14 வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் கடந்த ஏப்ரலில் கொரோனா 2-ம் அலை தொடங்கி மிகமோசமாக பரவியதால், தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. சி.பி.எஸ்.இ., 10-ம் வகுப்பு தேர்வுகள் மட்டும் ரத்து செய்யப்பட்டன.

12-ம் வகுப்பு தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து சி.பி.எஸ்.இ., ஜூன் முதல் தேதி முடிவெடுக்க உள்ளனர். ஆனால் தற்போது தேர்வுகளை ரத்து செய்து மாணவர்களை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு “சேவ் போர்ட் ஸ்டூடன்ட்ஸ்” என்ற ஹாஷ்டேக் உருவாக்கி சமூக ஊடகங்களில் ஆதரவு திரட்டி வருகின்றனர். இது பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகளிடம் பேசியுள்ளது. அவர்கள், “தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தவரை, தேர்வுகளை முற்றிலுமாக ரத்து செய்வதற்கு வாய்ப்புள்ளது. சி.பி.எஸ்.இ., நிலைமையை மறுபரிசீலனை செய்யும். தேர்வுகள் ரத்து செய்யப்பட்டால் மாற்று மதிப்பீட்டு திட்டத்தை உருவாக்க வேண்டியிருக்கும்” என கூறியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE