சென்னை :மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வழியே வகுப்புகள் நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட, குழு அமைக்கவும், அக்குழு ஒரு வாரத்துக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பிக்கவும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக, தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வகுப்புகள், ஆன்லைன் வழியாக, ஓராண்டாக நடந்து வருகின்றன. இந்த ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தவும், அதில் தவறுகள் நடந்தால், உடனடி நடவடிக்கை எடுப்பதற்குமான ஆலோசனைக் கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். கூட்டத்தில், சமீபத்தில், ஆன்லைன் வகுப்பில் நடந்த, சில விரும்பத்தகாத நிகழ்வுகள் குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும், முதல்வர் ஆய்வு செய்தார்.
இதுபோன்ற சம்பவங்கள், மீண்டும் நடக்கக் கூடாது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற பள்ளி, கல்லுாரிகளில், இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க, சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விபரம்:
* ஆன்லைன் வழியாக நடத்தப்படும் வகுப்புகள், அந்தந்தப் பள்ளிகளால், பதிவு செய்யப்பட வேண்டும். இப்பதிவை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இருவர் கொண்ட குழு, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்
* ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக, முறையான வழிகாட்டுதல்களை வகுத்து வெளியிட, பள்ளிக் கல்வித்துறை ஆணையர், கல்லுாரி கல்வி இயக்குனர், கணினி குற்ற தடுப்புப் பிரிவு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான, காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்
* இக்குழு மாநிலத்தில் உள்ள, பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில், பாலியல் தொல்லைகள் தரப்படுவதை தடுக்க, உரிய வழிமுறைகளை பரிந்துரைக்கவும், இணையவழி வகுப்புகளை நெறிப்படுத்துவது குறித்தும், வழிகாட்டு நெறிமுறையினை, ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்
* ஆன்லைன் வகுப்புகளில், முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ - மாணவியர் புகார் தெரிவிக்க, ஒரு, 'ஹெல்ப்லைன்' எண் உருவாக்க வேண்டும்
* ஆன்லைன் வகுப்புகள் குறித்து வரும் புகார்களை, மாநிலத்தின் கணினி குற்ற தடுப்புக் காவல் பிரிவில், எஸ்.பி., நிலையில் உள்ள அலுவலர் உடனடியாக பெற்று, சம்பந்தப்பட்ட மாணவ - மாணவியருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விசாரித்து, துரிதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE