கோவை: கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி, ரூ.20 ஆயிரத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
திண்டுக்கல் சின்னாளபட்டியை சேர்ந்தவர் மோகன்ராம், 37. இவர் மீது திண்டுக்கல், திருப்பூர், சென்னையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த, 2016ல் கோவை மாவட்டம் சூலூர், சிந்தாமணிப்புதூரில், மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகிய மூவரை துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்த வழக்கில் இவர் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த, 2018ல் மும்பையில் தலைமறைவாக இருந்த மோகன்ராமை கோவை போலீசார் கைது செய்தனர். கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரணை கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் கைதிகள் மேற்கொள்ளும் பணிக்காக வழங்கப்படும் ஊதியம் கைதிகளின் கையிருப்பு தொகை என்ற கணக்கில் சேமித்து வைக்கப்படும். இந்நிலையில், விசாரணை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோகன்ராம், தனது கைதிகளின் கையிருப்பு தொகையில் இருந்து ரூ.20 ஆயிரத்தை தமிழக முதல்வரின் கோவிட்19 நிவாரண நிதிக்காக சிறை எஸ்.பி., செந்தாமரை கண்ணனிடம் வழங்கியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE