சென்னை: தமிழர்கள் உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக ‛தி பேமிலி மேன்-2' வெப் சீரிஸ்க்கு பல தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், எதிர்ப்புக்கு மத்தியில் அமேசான் ப்ரைமில் வெளியானது. இதனால், அதிர்ச்சியடைந்த பலரும் இந்த வெப் சீரிஸ்க்கு எதிராக கருத்து பதிவிட்டதால் இந்த விவகாரம் டுவிட்டரில் டிரெண்டானது.
ராஜ், டிகே இயக்கத்தில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா நடித்து, ஹிந்தியில் உருவான, 'தி பேமிலி மேன் - 2' வெப் சீரிஸ்க்கு டிரைலர் வெளியான நாள் முதல் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதில், ராஜி என்ற தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். அவரை பயங்கரவாதி போலவும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளது போலவும் காட்டியுள்ளனர். குறிப்பாக, தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால், நாம் தமிழர் கட்சி உட்பட பல தமிழ் அமைப்புகள் இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என குரல் கொடுத்துவந்தனர்.

தமிழர்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்டதாக கூறப்படும், 'தி பேமிலி மேன் - 2' வெப் சீரிஸ் பல எதிர்ப்புகளை மீறி 'அமேசான் ப்ரைம்' ஓ.டி.டி., தளத்தில் வெளியானது. இது பலருக்கும் இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இத்தொடரையும், அமேசான் ஓடிடி தளத்தையும் விமர்சித்து பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‛தமிழர்களின் உணர்வை புண்படுத்தும் 'தி பேமிலி மேன் 2' இணையத்தொடர் ஒளிபரப்பை நிறுத்தாவிட்டால் அனைத்து அமேசான் சேவைகளையும் உலகத்தமிழர்கள் புறக்கணிப்போம்,' என எச்சரிக்கை விடுத்ததுடன், அமேசான் ப்ரைம் தலைமை அதிகாரி அபர்ணா புரோகித்துக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேமிலி மேன்-2 தொடர் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக FamilyMan2_against_Tamils, BoycottAmazon, Raji, LTTE, போன்ற ஹேஸ்டேக்கில் பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். அமேசானின் சேவைகள் அனைத்தையும் புறக்கணிக்கப்போவதாகவும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
அவற்றில் சில..

* தமிழர்களின் உணர்வுகளை, கோரிக்கைகளை புறக்கணித்துள்ள அமேசானை தமிழர்களும் புறக்கணிப்போம்.
* ஒரு சமூகத்தை பயங்கரவாதியாக சித்தரிக்கும் எண்ணத்தை இயக்குனர்கள் முதலில் கைவிட வேண்டும். இதனால் அவர்களுக்கு எந்த லாபமும் கிடைக்கப்போவதில்லை, மாறாக மற்றவர்களுக்கு அந்த சமூகத்தின் மீது அச்சத்தை தான் உண்டுப்பண்ணும்.
* தமிழர்கள் பலர் கோரிக்கை வைத்திருந்தாலும், அவற்றை காதில் வாங்காமல், எங்கள் எதிர்ப்பை விளம்பரமாக மாற்றி வெப் சீரிஸை வெளியிட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் செயல் நிச்சயம் கண்டிக்கத்தக்கது.
* ராஜி கதாபாத்திரத்தில் தமிழ் பேசும் பயங்கரவாதியாக நடிப்பதற்கு முன்பே, நடிகை சமந்தா யோசித்திருக்க வேண்டும். கதை கேட்கும்போதே குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதை சமந்தா புரிந்து நடிப்பதை தவிர்த்திருக்க வேண்டும். கேட்டால், இது நடிப்பு, கலை என பேசுவார்கள்.
- இதுபோன்று பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் இந்திய அளவிலான டிரெண்டிங்கில் இடம்பெற்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE