சென்னை: கோவிட் 3வது அலையை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஆக்ஸிஜன் உற்பத்தியை மத்திய, மாநில அரசுகள் தொடர வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளது.
ஆக்ஸிஜன் உற்பத்தி, மருந்து தடுப்பூசி விநியோகம் குறித்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழகத்தில் இதுவரை 1.20 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் ஏராளமான படுக்கைகள் காலியாக உள்ளன. தடுப்பூசி போடும் பணிகள் முன்னேற்றம் அடைந்து உள்ளது. மூன்றாவது அலை ஏற்படும் என்பதற்கு அறிவியல் ரீதியான ஆதாரம் இல்லை எனக்கூறினார்.

தொடர்ந்து, இந்த வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள் கூறியதாவது: 3வது அலை தாக்கும் அபாயம் இருப்பதாக கூறுவதற்கு எந்த அறிவியல் பூர்வ அடிப்படையும் இல்லை என்ற போதிலும், இரண்டாவது அலையை சமாளிக்க எடுக்கப்பட்ட வசதிகளை அகற்றாமல் தொடர வேண்டும். ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடர வேண்டும். தடுப்பூசி விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீண்டும் வைரஸ் பரவல் ஏற்பட்டால், அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE