புது டில்லி: உருமாறிய கொரோனா வைரஸ் வகையான டெல்டா பிளஸ்ஸை ஆபத்தானது என மத்திய அரசு வகைப்படுத்தியுள்ள நிலையில், அதனை நிரூபிக்க இதுவரை எந்தவொரு தரவுகளும் இல்லை என பிரபல வைரலாஜிஸ்டும், ராயல் சொசைட்டி ஆப் லண்டனின் முதல் இந்திய பெண் உறுப்பினருமான ககன்தீப் கங் தெரிவித்துள்ளார்.
![]()
|
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸின் டெல்டா வகை கண்டறியப்பட்டது. அது தான் இந்த கோடைக்காலத்தில் கொடிய இரண்டாம் அலை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. தற்போது அதனுடன் தொடர்புடைய டெல்டா பிளஸ் வகை பரவலாக ஆங்காங்கே இருப்பது தெரிய வருகிறது. இந்தியாவில் இந்த டெல்டா பிளஸ் வகை முதலில் ஏப்ரலில் கண்டறியப்பட்டது. 40 டெல்டா பிளஸ் மாதிரிகளில் 16 மஹாராஷ்டிராவில் உறுதியாகியிருக்கிறது. சென்னையில் இன்று (ஜூன் 23) ஒருவரிடம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்தியா தவிர அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சீனா என மேலும் 9 நாடுகளில் இவ்வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தானது என்பதற்கு தரவுகள் இல்லை
உருமாறிய வைரஸ் வேகமாக பரவினால், தீவிர பாதிப்பை உண்டாக்கினால், சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளின் பலனை குறைத்தால் அவற்றை கவலைக்குரிய வகை (Variant of concern) என வகைப்படுத்துவார்கள். தற்போது டெல்டா பிளஸ்ஸை மத்திய அரசு அப்படி தான் வகைப்படுத்தியுள்ளது. ஆனால் அவை வேகமாக பரவுகிறது அல்லது கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதற்கான தரவுகளேதும் இல்லை என வைராலஜிஸ்ட் ககன்தீப் கங் கூறுகிறார். அப்படி இருக்கும் போது விரைவாக முடிவுக்கு வர தேவையில்லை, அதனை உறுதிப்படுத்த உயிரியல் மற்றும் ஆய்வக தகவல்கள் தேவை என்கிறார்.
கண்காணித்தால் போதும்!
கொரோனா வைரஸ் மற்றும் இன்ப்ளூயன்ஸா வைரஸ்களின் மரபணு தரவுகளை அனைவரும் அணுகக் கூடிய வகையில் வைத்திருக்கும் ஒரு அமைப்பு ஜி.ஐ.எஸ்.ஏ.ஐ.டி., அதில் டெல்டா பிளஸ் வகையின் 166 உதாரணங்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அசல் டெல்டாவை விட டெல்டா பிளஸ் ஆபத்தானது என்று நம்புவதற்கு தங்களுக்கு அதிக காரணம் கிடைக்கவில்லை என லூசியானா மாநில பல்கலைக்கழகத்தின் வைராலஜிஸ்ட், டாக்டர் ஜெர்மி காமில் கூறியுள்ளார். “பலவீனமானவர்கள் அல்லது முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களிடையே வேண்டுமானால் லேசான பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் கவலைப்பட தேவையில்லை, கண்காணிப்பது நல்லது.” என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE