புதுடில்லி :ஊழல் வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள, ஹரியானா முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலா, 86, விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளார்.
ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. கடந்த, 2000ம் ஆண்டில், மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. இதில், ஐ.என்.எல்.டி., எனப்படும் இந்திய தேசிய லோக் தளத் தலைவரும், முன்னாள் முதல்வருமான, ஓம் பிரகாஷ் சவுதாலா, அவருடைய மகன், அஜய் சவுதாலா உட்பட, 56 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
![]()
|
கொரோனா பரவல் காரணமாக, சிறைகளில் நெரிசலை குறைக்க, டில்லி அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏழு முதல் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று, ஐந்து மாதங்களே பாக்கி உள்ளவர்கள், விடுவிக்கப்பட உள்ளனர்.
கடந்த, 2013ல் சிறையில் அடைக்கப்பட்ட சவுதாலா, கடந்தாண்டு, மார்ச்சில், அவசர பரோலில் விடுவிக்கப்பட்டார். கொரோனா பரவல் காலத்தில், அது இரு முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு மேலும், மூன்று மாத தண்டனையே பாக்கி உள்ளது.
தற்போது டில்லி அரசின் புதிய உத்தரவால், அவர் எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம். உரிய நீதிமன்றத்தில் அவர் ஆஜரான பிறகு, விடுதலை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.