இந்திய நிகழ்வுகள்
விபத்தில் 4 வாலிபர்கள் பலி
ஆக்ரா: உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில், நேற்று முன்தினம் ஆறு பேர் சென்ற கார், டயர் வெடித்ததால் நிலைதடுமாறி சாலை தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. விபத்தில், காரில் இருந்த ஆக்ராவை சேர்ந்த ஆஷிஷ், 19, நிகில், 18, உட்பட நான்கு வாலிபர்கள் பலியாயினர்
இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
லக்னோ: உத்தர பிரதேசத்தின் மதுராவில், 2வது மாடி வீட்டில் இருந்த, 17 வயது இளம்பெண்ணை, சமீபத்தில் மூன்று இளைஞர்கள், தங்களுடன் அழைத்து செல்ல முயன்றுள்ளனர்.அதற்கு மறுத்த இளம்பெண்ணை, 'பால்கனி'யில் இருந்து கீழே தள்ளினர். அவர் சாலையில் விழும் காட்சிகள், 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளது. வழக்கு பதிவு செய்த போலீசார், இரு இளைஞர்களை கைது செய்தனர்.
தமிழக நிகழ்வுகள்

யாரிடமும் கைகட்டி வேலை செய்ய பிடிக்காது: மதன்
சென்னை:'எனக்கும், என் மனைவிக்கும் யாரிடமும் கை கட்டி வேலை செய்ய பிடிக்காது. அதனால், ஆபாச பேச்சு வாயிலாக கோடிகளை குவித்தோம்' என, 'பப்ஜி' மதன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்தவர் மதன், 29. இவரது மனைவி கிருத்திகா, 25. இருவரும், தடை செய்யப் பட்ட பப்ஜி எனும் 'ஆன்லைன்' விளையாட்டை, ஆபாச பேச்சுகளுடன், தங்களின், 'யுடியூப்' சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்து, பல கோடிகளை குவித்தனர். இவர்கள் மீது 300க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்தனர்.
‛செட்' ஆகாது
சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மதன், கிருத்திகா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில், மதனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து, நேற்று மீண்டும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர்.
போலீசாரிடம் மதன் அளித்துள்ள வாக்குமூலம்:நானும், என் மனைவியும் பொறியியல் பட்டதாரிகள். காதலித்து திருமணம் செய்தோம். எங்களுக்கு எட்டு மாத குழந்தை உள்ளது. எனக்கும், கிருத்திகாவுக்கும் யாரிடமும் கை கட்டி வேலை செய்ய பிடிக்காது. காலை 10:00 மணிக்கு போய், மாலை 5:00 மணிக்கு வீடு திரும்பும் வேலையெல்லாம் நமக்கு, 'செட்' ஆகாது. சொந்தமாக தொழில் செய்ய வேண்டும். கோடிகளை குவிக்க வேண்டும். அதன் வாயிலாக ஜாலியாக வாழ வேண்டும். இது தான் எங்கள் பாலிசி.
எனக்கு அறிவுரை சொன்னால் சுத்தமாகவே பிடிக்காது. நானும் யாருக்கும் அறிவுரை சொல்ல மாட்டேன்.சென்னை அம்பத்துாரில் ஓட்டல் துவங்கினேன்; படுத்துவிட்டது; தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதனால் என் மனைவி தான், யுடியூப் சேனல் துவங்கலாம் என கூறினார். அதிலும் தனித்து தெரிய வேண்டும் என முடிவு செய்தேன். பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டிற்கு சிறுவர்கள், இளைஞர்கள், பெண்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்தேன்.
அடிமைப்படுத்தினோம்
அதற்காக, அதிநவீன தொழில் நுட்ப வசதியை பயன்படுத்தி, பப்ஜி விளையாட்டிற்கு ஆபாசமாக பின்னணி குரல் கொடுத்து, யுடியூப் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்தோம். பெண்களை கவர, என் மனைவியும் ஆபாசமாக பேசினார்.எங்களுக்கு பின்னால், எட்டு லட்சம் பேர் திரண்டனர். இவர்களை எங்களின் ஆபாச பேச்சுக்கு அடிமைப்படுத்தினோம். இதன் வாயிலாக கோடிகளை குவித்தோம். இரண்டு 'ஆடி' கார்கள், சொகுசு பங்களாக்கள் வாங்கினோம். எங்கள் வயதை மீறி வருமானத்தை குவித்தோம்.
குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக வேண்டும் என்ற இலக்குடன், தினமும் 18 மணி நேரம் யுடியூப் சேனல்களுக்காக உழைத்தோம். சில பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, எங்களை பற்றி புகழ்ந்து பேசி, 'வீடியோ' வெளியிட வைத்தோம்.ஏழைகளுக்கு உதவி செய்வது போல நடித்து, சிறுவர்கள், பெண்கள், இளைஞர்கள் என, பலரிடம், பல லட்சம் ரூபாய் வரை குவித்தோம். பணம் தான் எங்களின் பிரதான நோக்கம். அதற்காக நாங்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் ஆபாச பேச்சு.இவ்வாறு, மதன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
'சகோதரியை துன்புறுத்தியதால் கொலை செய்தேன்'
திருத்தணி-'என் சகோதரியை துன்புறுத்திய ஜாகீர் உசேனை, இரு நண்பர்கள் உதவியுடன் கத்தியால் வெட்டி கொலை செய்தேன்' என, கைது செய்யப்பட்ட குமரேசன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.திருத்தணி, அக்கைய்ய நாயுடு, இரண்டாவது டேங்க் தெருவைச் சேர்ந்த மொய்தீன் மகன் ஜாகீர் உசேன், 28, என்பவரை, நேற்று முன்தினம், திருத்தணி, உச்சிபிள்ளையார் கோவிலில், ஸ்டாலின் நகரைச் சேர்ந்த குமரேசன், 22, அவரது நண்பர்கள் சந்தோஷ்பாபு, 22, ஜெயசந்துரு, 21, ஆகிய மூவரும், கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.பின், மூவரும் அரக்கோணம் போலீசில் சரணடைந்தனர். அதை தொடர்ந்து, திருத்தணி போலீசார், குமரேசன், சந்தோஷ்பாபு, ஜெயசந்துரு ஆகியோரை திருத்தணிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது, குமரேசன் போலீசாரிடம் கூறியதாவது:என் சகோதரி சரண்யாவை திருமணம் செய்த ஜாகீர் உசேன், குடித்து விட்டும், கஞ்சா புகைத்தும், அடித்து கொடுமைப்படுத்துவார். இதை தடுக்கும் போது, என்னையும் பலமுறை தாக்கினார்.சம்பவம் நடந்த அன்று, எங்கள் வீட்டில் இருந்த சரண்யாவை, ஜாகீர் உசேன் கடுமையாக தாக்கினார். தகவல் அறிந்து, அங்கு சென்ற போது என்னையும் தாக்கினார்.இதையடுத்து, ஜாகீர் உசேனை கொலை செய்ய திட்டமிட்டு, நானும், திருத்தணியைச் சேர்ந்த என் நண்பர்கள் சந்தோஷ்பாபு, ஜெயசந்துரு ஆகியோரை வரவழைத்து, உச்சி கோவில் பின்புறத்தில் சுவர் ஏறி குதித்து, அங்கு உட்கார்ந்திருந்த ஜாகீர் உசேனை கழுத்து அறுத்தும், வெட்டியும் கொலை செய்தோம்.அங்கிருந்து, இரு சக்கர வாகனம் மூலம் அரக்கோணம் காவல் நிலையத்தில் சரணடைந்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.அதை தொடர்ந்து, மூவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
பெண் போலீசாரை மிரட்டிய 'குடி'மகன்
புழல்-சென்னை புழல் தேசியநெடுஞ்சாலை சந்திப்பில், நேற்று மதியம், 3:00 மணி அளவில், புழல் காவல் நிலைய பெண் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, பாடியநல்லுார், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திக், 37, என்பவர், இரு சக்கர வாகனத்தில், முக கவசம் அணியாமல் சென்றார். அங்கிருந்த பெண் போலீசார், அவரை முக கவசம் அணிய வலியுறுத்தினர். அப்போது, குடிபோதையில் இருந்த, அவர், போலீசாரை ஒருமையில் பேசினார். மேலும், பிரபல ரவுடியின் பெயரை சொல்லி மிரட்டினார். அவர் வந்த வாகனத்திற்கான ஆவணங்கள் இல்லாததால், போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவர் போக்சோவில் கைது
புழல்-வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர், 'போக்சோ'வில் கைதானார்.சென்னை, புழல், அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏசுதாஸ், 64. அவரது வீட்டில், கணவன், மனைவி தம்பதி, தங்களின் ஆறு வயது மகளுடன் வாடகைக்கு குடியிருந்தனர்.இருவருமே தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்கின்றனர். ஊரடங்கு காரணமாக பள்ளி விடுமுறை என்பதால், அவர்கள் தங்களது மகளை வீட்டில் விட்டுச்செல்வது வழக்கம். நேற்று முன்தினமும் வழக்கம் போல் அந்த சிறுமி, வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது வீட்டின் உரிமையாளரான ஏசுதாஸ், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து, மாலை வீட்டிற்கு வந்த தன் பெற்றோரிடம் சிறுமி கூறி உள்ளார்.இதையடுத்து, அவர்கள் நேற்று காலை, மாதவரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், ஏசுதாசை போக்சோவில் கைது செய்தனர்.
நொளம்பூரில் பெண் எரித்து கொலை கொடூர கள்ளக்காதலன் கைது
நொளம்பூர்-நொளம்பூரில், நகைக்காக பெண்ணை எரித்துக்கொன்ற கள்ளக்காதலனை, போலீசார் கைது செய்தனர்.வளசரவாக்கம் மண்டலம், 146வது வார்டில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளராக ரேவதி, 35, பணிபுரிந்து உள்ளார்.இவரை காணவில்லை என, அவரின் கணவர் முருகன், 21ம் தேதி மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பழக்கம்அதே சமயம், நொளம்பூர் சர்வீஸ் சாலையில், அடுக்குமாடி குடியிருப்பு எதிரே உள்ள முட்புதரில், எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்றை நொளம்பூர் போலீசார் நேற்று முன்தினம் மீட்டனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், வானகரம், சக்தி சாய் நகரைச் சேர்ந்த ரேவதி, 35, என தெரியவந்தது. இதையடுத்து, ரேவதியின் மொபைல் எண்ணை ஆய்வு செய்ததில், திம்மப்பா என்பவரிடம் அதிகமாக பேசியது தெரியவந்தது.தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த திம்மப்பா, மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் தங்கி, வளசரவாக்கம் மண்டலம், 146வது வார்டில், குப்பை சேகரிக்கும் 'பேட்டரி ஆட்டோ' ஓட்டி வந்துள்ளார்.இருவரும் ஒரே வார்டில் பணி செய்து வந்த நிலையில் ஏற்பட்ட பழக்கம், கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில், 16ம் தேதி ரேவதி, தன் 5 சவரன் செயினை திம்மப்பாவிடம் கொடுத்தார்.
அதை, ஆலப்பாக்கத்தில் உள்ள அடகு கடையில், 35 ஆயிரம் ரூபாய்க்கு திம்மப்பா அடகு வைத்தார். இதில், 20 ஆயிரம் ரூபாய் ரேவதியும், 15 ஆயிரம் ரூபாய் திம்மப்பாவும் பிரித்துக் கொண்டனர்.இதையடுத்து, 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை, இருவரும் பணிக்கு செல்லவில்லை. மீண்டும், 21ம் தேதி பணிக்கு சென்றனர்.அப்போது, துாய்மை பணி மேற்பார்வையாளர் கமலக்கண்ணன் என்பவர், ரேவதி தொடர்ந்து பணிக்கு வராததால், கணவனிடம் கடிதம் பெற்று வர கூறி திருப்பி அனுப்பினார்.
கழுத்தை அறுத்துஇதையடுத்து, அன்று மாலை ரேவதி, தன் பிள்ளைகளிடம் ஆலப்பாக்கம் சென்று வருவதாக கூறி, திம்மப்பாவை பார்க்க சென்றார்.மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த திம்மப்பா, ரேவதியையும் அழைத்து, நொளம்பூர் சர்வீஸ் சாலை அருகே சுற்றுச்சுவர் கட்டப்பட்ட காலி மனைக்கு சென்றார்.அப்போது, ரேவதி தன், 5 சவரன் செயினை மீட்டு தரும்படி கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில், திம்மப்பா ரேவதியை அடித்துள்ளார். அவர் சத்தம் போடவே, அருகில் இருந்த பேப்பரை எடுத்து ரேவதியின் வாயில் வைத்து அடைத்தார்.
பின், அவர் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால், இரண்டு கைகள் மற்றும் கால்களையும் கட்டினார். மேலும், தான் வைத்திருந்த சிறிய கத்தியால் ரேவதியின் கழுத்தை அறுத்து முட்புதரில் தள்ளிவிட்டார். அதன் பின், அவர் மேல் தீ வைத்து, திம்மப்பா அங்கிருந்து தப்பியது விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து, திம்மப்பாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

ஹரியானாவில் சிக்கினான் ஏ.டி.எம்., கொள்ளையன் :தனிப்படை அதிரடி
சென்னை :சென்னையில், எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,களில், நுாதன முறையில், 1 கோடி ரூபாய்க்கும் மேல் வாரி சுருட்டிய, வட மாநில கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவன், ஹரியானாவில் தனிப்படை போலீசாரிடம் சிக்கினான்.
இது தொடர்பாக, மேலும் மூவரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், கூட்டாளிகள் அனைவரையும் பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையில், பல்வேறு இடங்களில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின், 'டிபாசிட்' செய்யும் வசதியுள்ள ஏ.டி.எம்., மிஷின்களில், நுாதன முறையில் 1 கோடி ரூபாய்க்கு மேல் மர்ம நபர்கள் கொள்ளைஅடித்தது தெரிய வந்தது.இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து, எஸ்.பி.ஐ., சென்னை மண்டல தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வங்கி அதிகாரிகளுடன், கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, பணம் கொள்ளையடிக்கப்பட்ட மிஷினின் தன்மை பற்றி போலீசாரிடம் விளக்கினார்.
2.20 லட்சம் மிஷின்கள்
எஸ்.பி.ஐ., வங்கி, பணம் எடுப்பது மற்றும் டிபாசிட் செய்யும் வசதியுள்ள ஏ.டி.எம்., மிஷின்களை, இரு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, நாடு முழுதும் 2.20 லட்சம் மிஷின்களை நிறுவி உள்ளது. இவற்றில், ஓ.கே.ெஜ., என்ற நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்ட மிஷின்களில் தான் கொள்ளை நடந்துள்ளதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
அந்த வகையில், வட மாநில கொள்ளையர்களில் இருவர், ஜூன் 17ம் தேதி காலை, தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் டிபாசிட் செய்யும் ஏ.டி.எம்., மிஷினில், 70 ஆயிரம் ரூபாய் திருடி உள்ளனர்.அதேபோல், ராமாபுரம், திருவள்ளுவர் சாலையில் உள்ள ஏ.டி.எம்.,மில் 1.50 லட்சம் ரூபாய்; தரமணியில் 7 லட்சம் ரூபாய்; வேளச்சேரியில் 5 லட்சம் ரூபாய்; வடபழநி 100 அடி சாலையில், 69 ஆயிரம் ரூபாய் என, 1 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளைஅடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் மட்டும், 1 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளைஅடிக்கப்பட்டுள்ளது.
'கூகுள் மேப்' உதவி
கொள்ளையரை பிடிக்க, சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர், மத்திய புலனாய்வு அமைப்பான ஐ.பி.,யில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர். தனிப்படை போலீசாரின் விசாரணையில், 2013, 2014ல் ஆஸ்திரேலியா மற்றும் ருமேனியா நாடுகளில் இதுபோல் நடந்திருப்பது தெரிய வந்தது. இதை பின்பற்றி, ஹரியானா மற்றும் டில்லியைச் சேர்ந்த கும்பல், வங்கி ஏ.டி.எம்., கொள்ளையில் ஈடுபடுவது தெரிய வந்தது.
இதையடுத்து, சென்னையில் 'சிசிடிவி' கேமராவில் சிக்கிய மர்ம நபர்கள் குறித்து, ஹரியானா மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மாநில போலீசார், கொள்ளையர் குறித்து தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்து சென்ற போலீசார், கொள்ளை கும்பலைச்யசேர்ந்த முக்கிய குற்றவாளி அமீர், 37, என்பவரை கைது செய்துள்ளனர்; மேலும், மூவரை பிடித்துவிசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'கூகுள் மேப் உதவியுடன், இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஏ.டி.எம்.,மில் உள்ள தொழில்நுட்ப கோளாறு குறித்து, இவர்களுக்கு எப்படி தெரியும்; கொள்ளைக்கு, சென்னையை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடக்கிறது' என்றனர்.
ஏ.டி.எம்.,களில் கைவரிசை
போலீசாரிடம், அமீர் அளித்துள்ள வாக்குமூலம்: ஹரியானா மாநிலம், பரிதாபாத் மாவட்டம், பல்லப்கர்க் பகுதியில் வசித்து வருகிறேன். நானும், என் கூட்டாளிகளும் ஐந்து குழுக்களாக பிரிந்து, சென்னையில் ஜூன் 15ல் இருந்து 18 வரை, எஸ்.பி.ஐ., வங்கியின், 14க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.,களில் இருந்து கொள்ளையடித்தோம். என்னிடம் இருந்து போலீசார், 4.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மற்ற வங்கி ஏ.டி.எம்., கொள்ளையர்களை பிடிக்க, தனிப்படை போலீசார், ஹரியானாவில் முகாமிட்டுள்ளனர்.
அந்த 20 வினாடிகள்
எஸ்.பி.ஐ., வங்கியின் பணம் டிபாசிட் செய்யும் வசதியுள்ள ஏ.டி.எம்.,மில், 20 வினாடிகள் தாமதித்தால் பணம் மீண்டும் உள்ளே சென்றுவிடும். கொள்ளையர்கள், இந்த 20 வினாடிகளைத்தான் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் சுருட்டி உள்ளனர்.
போலி ஆவணங்கள் வாயிலாக பெறப்பட்ட ஏ.டி.எம்., கார்டுகளை பயன்படுத்தி கொள்ளையர்கள், டிபாசிட் மிஷின்களில் பணம் எடுத்துள்ளனர். பணத்தை எடுத்த உடனேயே, சென்சார் பகுதியை மறைத்து, மூட வேண்டிய ஷட்டரை 20 வினாடிகள் பிடித்து, மீண்டும் விட்டுள்ளனர்.
இதனால், ஏ.டி.எம்., மிஷின், பணத்தை கொடுத்த பின்னும், இருப்பு காட்டுகிறது. ஆனால், மிஷினில் பணம் இல்லை. இந்த முறையை பயன்படுத்தி தான், கொள்ளை நடந்துள்ளதாக, வங்கி அதிகாரிகள் கமிஷனரிடம் விளக்கம் அளித்தனர்.
ஒரே மிஷினில் 190 முறை
சென்னை பெரியமேடு பகுதி, வேப்பேரி நெடுஞ்சாலையில், எஸ்.பி.ஐ., வங்கியின், டிபாசிட் செய்யும் ஏ.டி.எம்., மிஷின் உள்ளது. கொள்ளையர்கள் இந்த மிஷினில் மட்டும், 15 முதல் 17ம் தேதி வரை, 190 முறை ஏ.டி.எம்., கார்டுகளை பயன்படுத்தி, 15 லட்சத்து, 71 ஆயிரத்து, 300 ரூபாயை எடுத்துள்ளனர். கொள்ளையர்களின் உருவம், 19 இடங்களில் உள்ள, 'சிசிடிவி கேமரா'க்களில் பதிவாகி உள்ளது. கொள்ளை குறித்து, இதுவரை 21 புகார்கள் பெறப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள், மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாணவியரை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்: வாலிபரின் அடாவடி 'வீடியோ'வால் அதிர்ச்சி
கோவை:கோவையில் கல்லுாரி மாணவிகளுடன் பழகி புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த வாலிபர் மற்றும் அவரது தாய் கைது செய்யப்பட்ட நிலையில், வாலிபரின் அடாவடி 'வீடியோ'க்கள் வெளியாகி உள்ளன.
கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்த 19வது மாணவி, தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் கல்லுாரி படிப்பை பாதியில் கைவிட்ட கேசவகுமார்(எ) விஜய சேதுபதி,24 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின், இருவரும் நெருங்கி பழகியதுடன், போட்டோ எடுத்து கொண்டனர்.அவ்வப்போது மாணவியிடம் குடும்ப கஷ்டத்தை சொல்லி வாலிபர் பணம், நகைகளை பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் மாணவி பணம் கொடுப்பதை நிறுத்தியபோது, வாலிபரின் உண்மையான சுயரூபம் தெரிந்தது.
பணம் கொடுக்கவில்லை என்றால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டினார். இதன் பின்னணியில், வாலிபரின் தாய் மற்றும் ஒரு கும்பலே உடந்தையாக இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்த மாணவி, தற்கொலை செய்து கொண்டார்.சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, கேசவகுமார் மற்றும் அவரது தாய் மங்கயர்க்கரசி, 46 ஆகியோரை கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது கேசவகுமாரின் சில 'அடாவடி' வீடியோக்கள் வெளியாகி உள்ளன.அந்த வீடியோக்களில், கல்லுாரி மாணவர்கள் சிலரை ஒரு அறையில் அடைத்து வைத்து கும்பலாக சேர்ந்து தாக்குவதும், அவர்கள் காதலிக்கும் மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை கேட்டு மிரட்டுவதும் பதிவாகியுள்ளது. இவர்கள் ஒரு பெரிய கும்பலாக செயல்பட்டு வந்ததும், இந்த கும்பலிடம் பல்வேறு கல்லுாரி மாணவிகள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
மேலும், பெரிய பட்டா கத்தியுடன் ரோட்டில் வலம் வருவது, கல்லுாரி மாணவர்களை ரோட்டில் கும்பலாக தாக்குவது போன்ற வீடியோ பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. கேசவகுமார், ஏற்கனவே தான் இரண்டு முறை சிறைக்கு சென்று வந்ததாகவும், போலீசில் புகார் அளித்தால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும், கல்லுாரி மாணவியின் பெற்றோரை மிரட்டி உள்ளார்.இதன்பின் தான் பயத்தில் அந்த மாணவி தற்கொலை செய்தார். தற்போது வெளியாகியுள்ள வாலிபரின் வீடியோக்கள் அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.