மதுரை : மதுரையில் ஒரு வயது பெண் குழந்தை யை விற்று விட்டு அந்த குழந்தை கொரோனாவால் இறந்ததாக நம்ப வைத்து அவரது தாயை இறுதி சடங்குகள் செய்ய வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
போலி ஆவணங்கள் தயாரித்து இதயம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து சட்டவிரோதமாக விற்கப்பட்டதா என விசாரணை நடக்கிறது. உரிமையாளர் சிவக்குமார், பொறுப்பாளர் மதர்ஷா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை நகர் ஆயுதப்படை மைதான வளாகத்தில் மாநகராட்சி மகப்பேறு மையம் இருந்த கட்டடத்தில் சில மாதங்களாக இந்த இல்லம் செயல்பட்டு வருகிறது. அரசின் அங்கீகாரம் பெறாமல் ஜெய்ஹிந்த்புரம் சிவக்குமார் நடத்தி வருகிறார். மதுரையில் போலீசார், சமூக ஆர்வலர்களால் மீட்கப்படும் ஆதரவற்றோர் தற்காலிகமாக இந்த இல்லத்தில் சேர்க்கப்படுகின்றனர். தற்போது 38 ஆண்கள், 35 பெண்கள், ஒரு வயதிற்கு மேற்பட்ட 2 ஆண் உட்பட 7 குழந்தைகள் உள்ளனர்.
வெளியே தெரிந்தது எப்படி
சில நாட்களுக்கு முன் கணவரை இழந்து சிரமப்பட்ட மதுரை மாவட்டம் மேலுார் சேக்கிப்பட்டி ஐஸ்வர்யா, அவரது 8 வயது மகள், 4 வயது மகன், ஒரு வயது மகளை இந்த இல்லத்தில் சமூக ஆர்வலர் அசாருதீன் என்பவர் சேர்த்தார்.
கடந்த 11ம் தேதி ௧ வயது குழந்தைக்கு உடல்நலம் பாதித்ததாக கூறி இல்ல பொறுப்பாளர்கள் வெளியே எடுத்துச்சென்றனர். இதுவரை குழந்தை என்ன ஆனதென்று தெரியவில்லை.நேற்றுமுன்தினம் ஐஸ்வர்யா கேட்டபோது, 'கொரோனாவால் மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை இறந்துவிட்டது. புதைத்து விட்டோம்' என்று தெரிவித்து, தத்தனேரி சுடுகாட்டிற்கு அழைத்துச்சென்று இறுதி சடங்கும் செய்ய வைத்தனர். இதையறிந்த அசாருதீன், 'மதுரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதன்முறையாக பச்சிளம் குழந்தை பலி' என்று ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார். அரசு மருத்துவமனை, சுகாதாரத்துறையிடம் விசாரித்தபோது குழந்தை இறந்ததாக தகவல் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
போலி ஆவணங்கள்
இதுகுறித்து நேற்றுமுன்தினம் இரவு ஆதரவற்றோர் இல்லத்தில் சுகாதார துறை, மாநகராட்சி, போலீசார், சமூகநலத்துறை, குழந்தைகள் நலக்குழுமம், சைல்டு லைன் அமைப்பினர் விசாரித்தனர். நரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜூன் 11ல் சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ரசீது, நேற்றுமுன்தினம் தத்தனேரியில் குழந்தையை புதைத்ததற்கான ரசீதை ஊழியர்கள் காண்பித்தனர். அதை ஆய்வு செய்தபோது போலி எனத்தெரிந்தது. இதற்கிடையே இல்ல உரிமையாளர் சிவக்குமார், பொறுப்பாளர் மதர்ஷா தலைமறைவாயினர்.
புதைத்த இடமும் 'போலி'
நேற்று காலை மற்றொரு பொறுப்பாளர் கலைவாணியுடன் அதிகாரிகள் தத்தனேரி சுடுகாட்டிற்கு சென்று குழந்தை உடலை தோண்டி எடுக்க முயன்றனர். அப்போது மாநகராட்சி நகர் நல அலுவலர் குமரகுருபரன் சந்தேகப்பட்டு பதிவேடுகளை ஆய்வு செய்தபோது, அங்கு வேறு ஒரு குழந்தை புதைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் தத்தனேரி சுகாதார ஆய்வாளர், நரிமேடு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் புகார் செய்தனர். இதற்கிடையே நேற்று மதியம் இல்லத்தில் இருந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்காக எடுத்துச் செய்தனர்.
இன்னும் 2 குழந்தைகள் மாயம்
அதிகாரிகள் கூறியதாவது: முதற்கட்ட விசாரணையில், குழந்தையை இறந்ததாக கணக்கு காட்டி சட்டவிரோதமாக விற்பனை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. ஆதரவற்றோருக்கு உதவுவது போல் சிவக்குமார் நடித்து அதிகாரிகளை நம்ப வைத்து ஆங்காங்கே இல்லங்களை நடத்தி வந்துள்ளார். இதுவரை இந்த இல்லத்தில் 3 குழந்தைகளை காணவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் உடலை புதைத்ததாக கூறி பரிசுத்தொகையுடன்கூடிய அரசின் விருதை இல்ல பொறுப்பாளர்கள் பெற்றுள்ளனர். இதுவும் மோசடி செய்து பெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இல்லத்தில் இருந்தவர்கள் வேறு இல்லங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர், என்றனர்.
![]()
|
2 பேருக்கு மட்டும் தெரியும் ரகசியம்
நகர் நல அலுவலர் குமரகுருபரன் கூறியதாவது: குழந்தைக்கு காய்ச்சல் இருந்துள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்காமல் 2 நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி காரில் மதர்ஷாவும், சிவக்குமாரும் அழைத்துச் சென்றுள்ளார்.
இதுவரை குழந்தை நிலை தெரியவில்லை. தவிர, குழந்தையை புதைத்ததாக கூறிய இடத்தில் தாயார் ஐஸ்வர்யா சடங்கு செய்வதற்கான ஏற்பாட்டை மதர்ஷாதான் முன்னின்று செய்திருக்கிறார். அவரும், சிவக்குமாரும் கிடைத்தால்தான் முழுவிபரமும் தெரியவரும், என்றார்.
இந்நிலையில் ஐஸ்வர்யாவின் குழந்தை மற்றும் ஒரு குழந்தை மீட்கப்பட்டுவிட்டதாக நேற்று இரவு போலீசார் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE