ஜெனிவா: 'மியான்மர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூகி விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்' என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், கோவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி, மீண்டும் வெற்றி பெற்றது. ஆனால் அந்த நாட்டு ராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தது. 'ராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை' எனக்கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியான்மர் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், மியான்மர் ராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது. மியான்மரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. இதற்கு உலக அளவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. யங்கூனில் நேற்று நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசிய ஐ.நா., தலைவர் அண்டோனியோ குட்டாரெஸ், 'தற்போது மியான்மரில் நிலவி வரும் சூழ்நிலை கவலையளிக்கிறது. ஜனநாயகம், மனித உரிமை ஆகியவை காக்கப்பட வேண்டும். மியான்மர் மக்களின் அடிப்படை உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்' என, வலியுறுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE