அடுத்த இரண்டு நாட்களுக்குள், 15 லட்சத்து 87 ஆயிரத்து 580 டோஸ் தடுப்பூசிகளை தருவதற்கு மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மத்திய சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ கவுன்சில் உயர் அதிகாரிகளை, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று டில்லியில் சந்தித்தார். இதன்பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் நிலவும் தடுப்பூசி பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்.
தடுப்பூசி தயாரிப்பில் சில சவால்கள் இருந்தாலும், வரும் 12ம் தேதிக்குள், 15 லட்சத்து 87 ஆயிரத்து 580 டோஸ் தடுப்பூசி தருவதாக மத்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் 11 மருத்துவ கல்லுாரிகளுக்கான அனுமதி குறித்தும் வலியுறுத்தப்பட்டது. மதுரை, 'எய்ம்ஸ்' கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், அதுவரை சிவகங்கை போன்ற அருகில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை துவங்குவதற்கான பணிகளை பரிசீலிக்கும்படியும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவது குறித்து தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு, மத்திய அரசு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.தொழில்நுட்ப ரீதியாக கோயம்பேடு போன்ற சில இடங்களை மட்டும் குறி வைத்து தடுப்பூசிகளை அதிகமாக போட்டு, கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.தமிழகத்தில் அடுத்த 100 நாட்களுக்குள் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். அப்போது தான் அடுத்த அலையை சமாளிக்க முடியும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE