புதுடில்லி: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோவிட் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒரு சில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பின், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தி வருகின்றன. மே 4ம் தேதியிலிருந்து கடந்த 68 நாட்களில் 38வது முறையாக இன்றும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 101.37 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 94.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 101.67 ஆகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ 94.39 ஆகவும் உள்ளது. டில்லியில் பெட்ரோல், லிட்டர் 100.91 ரூபாய், டீசல் லிட்டர் 89.88 ரூபாய்க்கும்; மும்பையில் பெட்ரோல், லிட்டர் 106.93 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 97.46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE