சென்னை-'மேகதாதுவில் அணை கட்டுவதை, எந்த நிலையிலும் சட்டப்படி தடுத்தே தீருவோம்' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:'மேகதாதுவில் அணை கட்ட, யாரையும் கேட்கத் தேவைஇல்லை' என, கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜா பொம்மையா கூறியிருக்கிறார். தமிழகத்திற்கு எந்தெந்த இடத்திலிருந்து, எவ்வளவு நீரை தர வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக ஆணையிட்டு இருக்கிறது.அதன்படி, தமிழகத்துக்கு வரும் நீரை இடைமறித்து, மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று சொல்வது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே புறக்கணிப்பது போன்றது.

மேலும், நடுவர் மன்றத்தின் தீர்ப்பிலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலும், ஒரு மாநிலத்திற்குள் ஓடுகிற நீர், அந்த மாநிலத்திற்கே என்று, சொந்தம் கொண்டாட முடியாது. அது, தேசிய சொத்து என்று தீர்ப்புரைத் அளித்திருப்பதை, கர்நாடக அமைச்சர் அறிந்திருப்பார் என்றே கருதுகிறேன். இவ்வளவையும் மீறி, அணையை கட்டுவோம் என்று சொல்வது, நடுவர் மன்ற தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், நாங்கள் மதிக்க மாட்டோம் என்று சொல்வது போல தெரிகிறது.
இது, ஒரு ஜனநாயக நாடு. இத்தகைய போக்கு, ஒரு மாநிலத்திற்குள் வளர்வதை, மத்திய அரசு பார்த்துக் கொண்டிருப்பது நல்லதல்ல. அண்டை மாநிலத்தின் உறவுக்கும், இது உகந்ததல்ல.'மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்' என்று, கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் சொல்வதைப் போல், எந்த நிலையிலும், சட்டப்படி அதை தடுத்தே தீருவோம் என்று சொல்வதற்கும், எங்களுக்கு உரிமை உண்டு.இவ்வாறு, துரைமுருகன் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE