சென்னை: மேகதாது அணை பிரச்னை தொடர்பாக, பிரதமரை சந்திப்பதற்காக அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு இன்று டில்லி செல்கிறது.கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு, தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஆனால், கர்நாடக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், 'தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும் அணை கட்டுவோம்' என, கூறி வருகின்றனர்.
மேகதாது அணை பிரச்னை குறித்து ஆலோசிப்பதற்காக, கடந்த 12ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் சட்டசபை கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்படுகை மாநிலங்களிடம் அனுமதி பெறாமல், மேகதாதுவில் எந்த கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. 'கர்நாடக அரசின் திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
![]()
|
மேலும், கூட்டத்தின் தீர்மானங்களை, அனைத்து கட்சியினரும் டில்லி சென்று, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழக சட்டசபை கட்சி தலைவர்கள் குழு, இன்று மாலை டில்லி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.இன்று டில்லி செல்லும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழு, நாளை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரை சந்தித்து, மேகதாது பிரச்னை உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து, மனு அளிக்க
உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.