மொபைல் போனில் ஆபாச படம் அனுப்பியவர்களின், முக்கிய உறுப்பை வெட்ட போவதாக கூறி, அரிவாளுடன், 'வீடியோ' வெளியிட்டுள்ளார், தமிழர் முன்னேற்ற படை நிறுவன தலைவி வீரலட்சுமி.வெளியுலகிற்கு அடையாளம் தெரியாத நபர்கள் ஒன்று கூடி, நண்பன் பிறந்த நாளுக்கு, பட்டாக் கத்தி, வீச்சரிவாளுடன், 'கேக்' வெட்டினாலே, அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்கிறது, போலீஸ்.
ஆபாச 'வீடியோ'
ஆனால், வீரலட்சுமி வீடியோ வெளியிட்டு, ஒரு வாரமாகியும், போலீஸ் நடவடிக்கை இல்லையே ஏன், என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து, வீரலட்சுமி கூறியதாவது:கடந்த 15 ஆண்டுகளாக, தமிழர் முன்னேற்ற படை என்ற கட்சியை நடத்தி வருகிறேன். பல போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். சட்டசபை தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்டேன்; மார்ச் 26ல் வேட்பு மனு தாக்கல் செய்தேன். அப்போது, என் 'வாட்ஸ் ஆப்' கணக்கை, 'நாட்பு' என்ற குழுவில் இணைத்து, ஆபாச வீடியோக்களை அனுப்பினர்.
இது குறித்து, அனகாபுத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரனிடமும் மனு கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை இல்லை. சில நாட்கள் அமைதியாக இருந்தவர்கள், மீண்டும் ஆபாச வீடியோ அனுப்பினர். இதை கண்டித்து, மே 2ல், மீனம்பாக்கத்தில்இருக்கும் மொபைல் போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்தினேன்; போலீசார் சமாதானப்படுத்தினர். பின், அனகாபுத்துார் காவல் நிலையத்தில் புகார் ஏற்பு ரசீது மட்டும் அளித்தனர்.இதன்பின், 20 நாட்களுக்கு முன், 'வாட்ஸ் ஆப் மெசஞ்சர்' வாயிலாக, எனக்கு தொடர்ந்து போன் செய்தனர். போன் எடுத்து பேசியபோது, முழு நிர்வாணமாக நின்றபடி ஒருவன் பேசினான்.சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து, ஆதாரங்களுடன் புகார் கொடுத்தேன். நடவடிக்கை எடுப்பதாக சொன்னார். 20 நாட்கள் கடந்து விட்டன; நடவடிக்கை எடுக்கவில்லை.
ஸ்டாலின் படம்
இரண்டு நாட்களுக்கு முன், சென்னை, நசரத்பேட்டையில் கட்சி ஆலோசனை கூட்டம் நடத்தினேன். அப்போதும், 'வாட்ஸ் ஆப் மெசஞ்சர்' வாயிலாக தொடர்பு கொண்டவர்கள், மீண்டும் நிர்வாணமாக 'போஸ்' கொடுத்து பேசினர். அதன் பின்னர் தான் அரிவாளுடன், வீடியோ எடுத்து வெளியிட்டேன்.
'வாட்ஸ் ஆப் மெசஞ்சரில்' பேசியிருப்பவர்கள்,தங்களின், 'புரொபைல்போட்டோ'வாக, முதல்வர் ஸ்டாலின் படம் வைத்துள்ளனர்.சில ஆண்டுகளுக்கு முன்,அரக்கோணம் அருகில் இருக்கும் தக்கோலம் ஆற்றில், தி.மு.க., பிரமுகரின் ஆட்கள், மணல் கடத்தலில் ஈடுபட்டனர். எனது படையுடன் சென்று, கடத்தலில் ஈடுபட்ட லாரிகளை பிடித்தேன். அவர்கள் எங்களை தாக்கினர்; பதிலுக்கு தாக்கினோம்.இதையடுத்து, ஆர்.எஸ்.மங்களம் போலீசார், இரு தரப்பினர் மீதும் வழக்குப் போட்டனர். அந்த பிரச்னையில் தொடர்புடையவர்களுக்கு, இதிலும் தொடர்பு இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் பதில் இது தான்!
போலீஸ் தரப்பில் கூறியதாவது: வீரலட்சுமி புகார் மீது, 'சைபர் கிரைம்' போலீசார் உதவியுடன் விசாரித்து வருகிறோம். முழுமையான விபரங்கள் கிடைக்கவில்லை; கிடைத்ததும் நடவடிக்கை எடுப்போம். 'கொஞ்சம் பொறுமையாக இருங்கள்; கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறிய பின்னும், வீரலட்சுமி அவசரப்பட்டு, வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் மீது வழக்கு போடுவது குறித்து, ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.- நமது நிருபர் --
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE