சென்னை : ''அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, தொழிலில் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன்,'' என, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
அ.தி.மு.க., ஆட்சியில், பள்ளி கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தவர், பாண்டியராஜன். இவர், அரசியலுக்கு வருவதற்கு முன், 'மாபா' என்ற பெயரில், மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். அமைச்சரான பின், தன் பதவிகளை, மற்றவர்களிடம் ஒப்படைத்து இருந்தார்.
சமீபத்திய சட்டசபை தேர்தலில், ஆவடி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு, கட்சியினர் உள்ளடியால் தோல்வியை தழுவினார். இதனால், மிகுந்த விரக்தியில் உள்ளார். தற்போது, அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு துணை செயலராகவும் உள்ளார். இவர், மாபா மற்றும் சி.எல்., மனிதவள நிறுவனத்தின் தலைவராக, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
![]()
|
பின், அவர் கூறியதாவது:'மாபா' மனிதவள நிறுவனம், ஒரு காலத்தில், இந்தியாவின் முதன்மை நிறுவனமாக இருந்தது. அமைச்சராக பொறுப்பேற்றதால், நிறுவன பணிகளில் கவனம் செலுத்தாமல், தீவிர அரசியலில் மட்டுமே ஈடுபட்டேன். தற்போது, தொழிலை கவனிக்க முடிவு செய்து, பொறுப்பேற்று உள்ளேன். அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்கு தொழிலில் அதிக கவனம் செலுத்த உள்ளேன்.
சிறிய நிறுவனங்களை பெரிய நிறுவனங்களாக மாற்றும் ஆலோசனைகள், மனிதவளங்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள உள்ளேன். இதற்காக, அரசியலுக்கு கொஞ்சம் ஓய்வளிக்க உள்ளேன். அதேநேரத்தில், அ.தி.மு.க.,வில் பொறுப்புகளை தொடர்கிறேன். இவ்வாறு, பாண்டியராஜன் கூறினார்.