சென்னை : கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், 2020ம் ஆண்டில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க, தனியார் பள்ளிகளுக்கு அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை, இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தது.இந்த மனுக்கள், நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன், விசாரணைக்கு வந்தன. பள்ளிகள் தரப்பில், 'உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, 85 சதவீத கட்டணம் வசூலித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்; முழுமையாக செலுத்த முடியாதவர்கள், 75 சதவீத கட்டணத்தை அளிக்க வேண்டும்.
'கட்டணமே செலுத்த முடியாதவர்களை பொறுத்தவரை, தனிப்பட்டவர்களின் நிலையைப் பொறுத்து, அந்தந்த பள்ளி நிர்வாகம் முடிவெடுக்கும். கட்டணம் செலுத்தாதவர்கள், பள்ளியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள்' என, தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், ''ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது, தமிழகத்துக்கு பொருந்தாது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 75 சதவீத கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். கட்டண நிர்ணய குழுவில் உள்ள காலியிடங்கள், இரு மாதங்களில் நிரப்பப்படும்,'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார், இவ்வழக்கில் இன்று அல்லது அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார். மாநில பாடத்திட்ட பள்ளிகள், சி.பி.எஸ்.இ., - ஆங்கிலோ இந்திய பள்ளிகளுக்கு, இந்த உத்தரவு பொருந்தும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.