வாஷிங்டன்: இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கோவிட் வைரஸ், உலகின் 100 நாடுகளுக்கு மேல் பரவிவிட்டது. எதிர்காலத்தில் இது இன்னும் தீவிரமாக தாக்கும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள சி.டி.சி., என்னும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

டெல்டா வகை கோவிட் வைரஸ் மெர்ஸ், சார்ஸ், எபோலா, ஜலதோஷம், பருவ காய்ச்சல், சிற்றம்மை, பெரியம்மை போல வேகமாக பரவுகிற வைரஸ். இது பெரியம்மை போல அதிவேகமாக தொற்றும்; எளிதாக பரவும்; கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், தடுப்பூசி போடாதவர்கள் என்ன வேகத்தில் பரப்புவார்களோ, அதே வேகத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களும் டெல்டா வைரசை பரப்புவார்கள்.அதே நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பாதுகாப்பானவர்கள். தடுப்பூசிகள் நோய்த்தொற்றின் 90 சதவீத தீவிரத்தை தடுக்கிறது. ஆனால் தொற்றை தடுப்பதிலும், பரப்புவதிலும் குறைவான செயல்திறனைத்தான் கொண்டுள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சி.டி.சி.,யின் இயக்குநர் டாக்டர் ரோச்செல்லி வாலன்ஸ்கை கூறுகையில், 'சிற்றம்மை, பெரியம்மை போல டெல்டா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவும். அனைவரும் கண்டிப்பாக முகக் கவசத்தை எப்போதும் அணிந்திருக்க வேண்டும். இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் போது, தடுப்பூசி செலுத்தாமல் தொற்று பாதிப்புக்கு ஆளாகிறவர்கள் போலவே மூக்கிலும், தொண்டையிலும் அதிகளவிலான வைரசை சுமந்து செல்வார்கள். அவர்களால் பிறருக்கு எளிதாக டெல்டா வைரஸ் பரவும்' என்றார்.