தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா மற்றும்முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத் திறப்பு விழாவை, அ.தி.மு.க., புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை நுாற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர்கருணாநிதி உருவப்படத் திறப்பு விழா, ஆக., 2ல் மாலை 5:00 மணிக்கு நடக்க உள்ளது.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருணாநிதி படத்தை திறந்து வைக்க உள்ளார்.
ஸ்டாலின் உத்தரவு
இந்த விழாவில், தி.மு.க., கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், கட்சி தலைவர்கள் என, 350க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் குடும்பத்தினரில் எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களாக இருப்பவர்களுக்கு மட்டும் அழைப்பிதழ் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மற்ற உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்க வேண்டாம் என, முதல்வர் ஸ்டாலின் தரப்பில் உத்தரவிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை. முன்னாள் சபாநாயகர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதால், பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்க உள்ளனர்.
கடைப்பிடிக்க முடிவு
அதேபோல ஜனாதிபதி பங்கேற்பதால், தமிழக பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிக்க வாய்ப்பு இல்லை.ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 65 பேர், கருணாநிதி படத்திறப்பு விழாவை புறக்கணிக்க வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் தி.மு.க., பங்கேற்கவில்லை. அதன் கூட்டணி கட்சி யான காங்கிரசும் புறக்கணித்தது. தி.மு.க., கடைப்பிடித்த புறக்கணிப்பு அணுகுமுறையை, அ.தி.மு.க.,வும் தற்போது கடைப்பிடிக்க முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
- நமது நிருபர் -