சென்னை :'தமிழகத்தில், மத நிறுவனங்களின் நிலங்களில் காலியானவை பற்றி, அரசுக்கு விவரம் கொடுக்கவில்லை. அதற்காக, அவை மாயமாகி விட்டதாகச் சொல்வதற்கில்லை. அவை மாயமாகி விடவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், அறநிலையத்துறை பதில் அளித்துள்ளது.
சேலம் கன்னன்குறிச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:
சட்டசபையில், 1985 -- 87ல் தாக்கல் செய்த, பண்பாட்டு மற்றும் அறக்கட்டகளை துறை கொள்கை விளக்க குறிப்பில், மத நிறுவனங்களுக்கு, 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த, 2018 -- 2020ல் தாக்கல் செய்யப்பட்ட குறிப்பில், 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பற்றி, எந்த விளக்கமும் இல்லை. மாயமான, 47 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்களை மீட்க, அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில், கோவில்கள் சிலவற்றின் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீட்பதற்கு உத்தரவிடவும் மனுவில் கோரியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அடங்கிய அமர்வு, '1985 - -87ம் ஆண்டு, 2018 - - 20ம் ஆண்டு கொள்கை குறிப்பில் கூறியுள்ள நில விபரங்களை, சர்வே எண்ணுடனும், பதில் மனுவாக அரசு தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டிருந்தது.
இவ்வழக்கில், அறநிலையத் துறை இணை கமிஷனர் பி.கவிதா பிரியதர்ஷினி தாக்கல் செய்த, இடைக்கால அறிக்கை:மத நிறுவனங்களின் நிலங்களை, நன்செய் நிலம், தரிசு, காலியிடம், கட்டடங்கள் அமைந்துள்ள நிலம் என வகைப்படுத்தி, ஆண்டுதோறும் அரசுக்கு வழங்குவது வழக்கம். 2019 - 20ம் ஆண்டு கொள்கை குறிப்பில், நன்செய், தரிசு நிலம் பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
கவனக்குறைவால், காலியிடம் மற்றும் கட்டடங்கள் அமைந்துள்ள நிலம் பற்றி குறிப்பிடப்படவில்லை. எனவே, மத நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் எதுவும் மாயமாகி விடவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மத நிறுவனங்களுக்கு சொந்தமான, மொத்த அசையா சொத்துக்களையும் கண்டறியும் வகையில், முழுமையான நடவடிக்கைகளை, அறநிலையத் துறை மேற்கொண்டு வருகிறது.
சர்வே எண் வாரியாக, மாவட்ட வாரியாக, கோவில் நிலங்கள் குறித்த ஆவணங்கள், வருவாய் துறையின் கீழ் வரும், 'தமிழ் நிலம்' தகவல் தொகுப்பு ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்படுகின்றன. இதற்கான அறிவுறுத்தல்கள், கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஒரு துண்டு நிலம் கூட கணக்கில் விடுபடாது.
அறநிலையத் துறை கமிஷனர், இணை கமிஷனர் ஒப்புதல் அளித்த சொத்து பதிவேடு மற்றும் கமிஷனர், மண்டல இணை கமிஷனர்கள், மாவட்ட உதவி கமிஷனர் அலுவலங்களில் உள்ள கோவில் சொத்து ஆவணங்கள், 'எல்காட்' நிறுவனம் வாயிலாக, 'டிஜிட்டல்' மயமாக்கும் பணி நடக்கிறது.இந்தப் பணிகள் முடிவடைய, ஆறு மாதங்கள் தேவைப்படும். எனவே, ஆவணங்கள் சரிபார்க்கும் பணியை முடித்து, முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய, ஆறு மாதம் அவகாசம் வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE