சென்னை: தடை செய்யப்பட்ட, 'பப்ஜி' விளையாட்டு, ஆபாச பேச்சுக்காக, கைது செய்யப்பட்ட மதனை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைத்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'யு டியூப் சேனல்' நடத்தி வரும் மதன் என்பவர், தடை செய்யப்பட்ட, 'பப்ஜி' விளையாட்டுக்களின் வாயிலாக, சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாகவும், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் புகார் எழுந்தது. மதனுக்கு எதிராக, நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணைக்காக ஆஜராகும்படி, மதனுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த மதன், ஜூன், 18ல் கைது செய்யப்பட்டார். பின், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாநகர போலீஸ் கமிஷனர், ஜூலை 5ல் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மதன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 'என் செயலால், சட்டம் - ஒழுங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை; சரியாக பரிசீலிக்காமல், குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது' என, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வில், நாளை விசாரணைக்கு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE