புதுடில்லி: 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தின் கீழ் ஒன்பதாவது தவணையாக 19 ஆயிரத்து 500 கோடி ரூபாயை பயனாளிகளுக்கு பிரதமர் இன்று விடுவிக்கிறார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2019ம் ஆண்டில், 'பிரதம மந்திரி கிசான்' திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக நிதி வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழ் இதுவரை எட்டு தவணைகளில், 1.38 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக விடுவிக்கிறார். 9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட உள்ளது. நிகழ்ச்சியில் விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவதுடன், நாட்டு மக்களிடமும் உரையாற்றுகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE