நாக்பூர்: 'திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் தருவது அவரதுகண்ணியத்தை சீர்குலைப்பதற்கு சமமானது' என ஒரு வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மஹராஷ்டிராவின் நாக்பூர் நகரில் பலசரக்கு கடை வைத்துள்ள ஸ்ரீகிருஷ்ணா தவாரி என்பவர் கல்யாணமான 45 வயது பெண்ணிடம் காதல் கடிதம் கொடுத்தது தொடர்பான வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. இதை எதிர்த்து ஸ்ரீகிருஷ்ணா தவாரி மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவில் மளிகை சாமான் பாக்கியை கேட்டதற்கு அந்த பெண் பொய் குற்றச்சாட்டு கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அளித்த தீர்ப்பு: திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுப்பது அவரது கண்ணியத்தை இழிவுப்படுத்துவதற்கு சமமானது. மனுதாரர் காதல் கடிதம் கொடுத்த மறுநாள் அந்த பெண்ணிடம் ஆபாச சேஷ்டைகள் செய்துள்ளார். அத்துடன் கடிதம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளார். அவ்வப்போது அந்த பெண்ணிடம் வாயை சுளித்து கண்ணால் காமவலை வீசியுள்ளார்.

எனவே ஒரு பெண்ணிடம் கண்ணியக் குறைவாக நடந்த குற்றத்திற்காக மனுதாரருக்கு விதிக்கப்பட்ட அபராதம் 90 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதில் 85 ஆயிரம் ரூபாயை அந்த பெண்ணிற்கு வழங்க வேண்டும். மனுதாரர் 45 நாட்கள் சிறையில் இருந்ததால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அவர் திருந்துவதற்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அபராதத்துடன் விடுவிக்கப்படுகிறார். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.