புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்ட காங்கிரசாரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில், ‛டுவிட்டரின் ஆபத்தான விளையாட்டு' என்ற தலைப்பில் யூடியூப்பில் ராகுல் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், டுவிட்டர் நிறுவனம் நடுநிலையானது என்ற கருத்தை மீறுவதாகவும், ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டில்லியில் சிறுமி பலாத்காரக் கொலையில், அந்தக் குழந்தையின் பெற்றோரைச் சந்தித்துப் பேசிய புகைப்படத்தை காங்கிரஸ் எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். டுவிட்டரின் விதிகளுக்கு முரணாகவும், குழந்தைகள் உரிமைகளுக்கு எதிராகவும், போக்சோ சட்டத்துக்கு எதிராகவும் புகைப்படம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ராகுல் தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து அந்தப் புகைப்படத்தை நீக்கினாலும் அவரின் டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிறுவனம் முடக்கியது. இதேபோல், காங்கிரசின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு, பல காங்., தலைவர்களின் டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில் ராகுல் ‛டுவிட்டரின் ஆபத்தான விளையாட்டு' என்ற தலைப்பில் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது: என்னுடைய டுவிட்டர் கணக்கை முடக்கியதன் மூலம் டுவிட்டர் நிறுவனம் எங்களின் அரசியல் செயல்பாட்டில் தலையிட்டுள்ளது. ஒரு நிறுவனம் தனது வியாபாரத்தை செய்வதற்காக எங்கள் அரசியலை வரையறுக்கிறது, ஒரு அரசியல் தலைவராக இதை நான் விரும்பவில்லை. இது இந்திய ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறேன்.

என்னுடைய டுவிட்டர் கணக்கை முடக்கியது ராகுல் என்னும் தனிமனிதனுக்கான தாக்குதல் என்று எளிதாக கடந்துவிட முடியாது. எனக்கு டுவிட்டரில் 2 கோடி பாலோவர்ஸ் (பின்தொடர்பவர்கள்) உள்ளனர். அவர்களின் கருத்துக் கூறும் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் நியாயமற்றது. டுவிட்டர் நிறுவனம் நடுநிலையானது என்ற கருத்தையும் மீறுகிறது. ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.
பார்லி.,யில் எங்களுக்கு பேச அனுமதியில்லை. ஊடகத்துக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. டுவிட்டர் மூலம் நாம் நினைத்த கருத்தை முன்வைக்கலாம் என நான் நினைத்தேன். ஆனால், உண்மையில் டுவிட்டர் நிறுவனம் முழுமையான நடுநிலையானது அல்ல எனத் தெரிந்துள்ளது. இது ஒருதரப்பான தளம். ஆட்சியில் இருக்கும் அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்கிறது. இவ்வாறு ராகுல் பேசியுள்ளார்.