புதுடில்லி: டில்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் நாட்டினர் ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவின் படைகள் வெளியேறியதையடுத்து 20ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். இந்நிலையில், டில்லியில் உள்ள ஆப்கன் அகதிகள், டில்லியில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையர் அலுவலகம் முன், "எங்களுக்கு எதிர்காலம் வேண்டும்", “பாதுகாப்பு வேண்டும்” போன்ற பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். அப்போது இந்தியாவின் ஆப்கானிஸ்தான் சமூகத்தினர் குழுத் தலைவர் அகமது ஜியா கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் மூன்று கோரிக்கையை வலியுறுத்தி இங்கு கூடியுள்ளோம். இந்தியாவில் நீண்ட கால விசா விண்ணப்பிக்க அகதிகள் அட்டை, மறுவாழ்வு தேடி பிற நாடுகளுக்குச் செல்ல ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையரகத்தின் ஆதரவு கடிதம், இந்திய அரசு மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். மேலும், வேலை, கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும். ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலையை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆப்கனிலிருந்து வருபவர்களை இந்தியா மீட்டு வருகிறது. ஆனால், அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையானதை செய்ய வேண்டும். நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசிக்கின்றோம். ஆனால், அடிப்படை ஆவணமான அகதிகள் அட்டை கூட இல்லை. இந்தியாவில் வாழும் 21 ஆயிரம் ஆப்கன் அகதிகளில், 13 ஆயிரம் பேரிடம் ஆவணங்கள் இல்லை. வேலை, கல்வி, உணவு மற்றும் பாதுகாப்பிற்காக போராடி வருகின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.