புதுடில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 80 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,164 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 25 லட்சத்து 58 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 34,159 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 17 லட்சத்து 88 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 3.33 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 607 பேர் கோவிட் தொற்றுக்கு பலியானார்கள்; இதுவரை 4,36,365 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.63 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.35 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.02 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தடுப்பூசி
இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 26) காலை 8 மணி நிலவரப்படி 60.38 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 80,40,407 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலக பாதிப்பு
இன்று (ஆகஸ்ட் 26-ம் தேதி) காலை 10:25 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 21 கோடியே 47 லட்சத்து 41 ஆயிரத்து 111 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 44 லட்சத்து 76 ஆயிரத்து 008 பேர் பலியாகினர். 19 கோடியே 20 லட்சத்து 81 ஆயிரத்து 019 பேர் மீண்டனர்.