ராய்ப்பூர்: 'விருப்பம் இல்லாத மனைவியை, கட்டாயப்படுத்தி கணவர் உடலுறவு கொள்வது தவறு என சட்டம் கொண்டு வர வேண்டும்' என, பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 'மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உடலுறவு கொள்வது தவறாகாது' என, சத்தீஷ்கர் நீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பு சர்ச்சையாகி உள்ளாது.
சத்தீஷ்கர் நீதிமன்றத்தில், தனது கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், கணவர் தன்னை கட்டாயப்படுத்தி விருப்பத்துக்கு மாறாக உடலுறவு கொள்வதாகவும், தன் எதிர்ப்பையும் மீறி, தகாத முறையில் உறவில் கொடுமைப் படுத்துவதாகவும் ஒரு பெண் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இன்று வழங்கிய தீர்ப்பில் தெரிவித்து உள்ளதாவது:
சட்டப்படி திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவு
வலுக்கட்டாயமாக இருந்தாலும் அல்லது மனைவியின் விருப்பத்திற்கு எதிராக
இருந்தாலும் அது பலாத்காரம் அல்ல.இந்த வழக்கில் புகார்தாரர் சட்டப்படி அவரது கணவரின் மனைவி. எனவே மனைவியுடன் உடலுறவு கொள்வது அது விருப்பமாக இருந்தாலும் அல்லது விருப்பமாக இல்லாவிட்டாலும் சரி பாலியல் பலாத்காரமாகாது.
கணவராக இருப்பதால் அவர் சட்டவிரோதமான காரியத்தைச் செய்ததாகக் கூற முடியாது. புகார் கொடுத்த பெண் 15 வயதுக்கு உட்பட்டவர் அல்ல.
இவ்வாறு தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் இருந்து அவரது கணவரை விடுவித்து தீர்ப்பு வழங்கினார். சத்தீஷ்கர் நீதிமன்றத்தின் இந்த சர்ச்சைக்குரிய தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE