ஊட்டி: கோடநாடு, கொலை, கொள்ளை வழக்கு முக்கிய குற்றவாளியான சயான், ஊட்டி செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதிமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சென்னையில் இது தொடர்பான விசாரணை இருப்பதால் இன்று இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கை செப்.2 ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். மேலும் 2, 3, 4 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடக்கும் என்றும் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த, 2017 ஏப்., 24ல் கொலை , கொள்ளை சம்பவம் நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி, கிருஷ்ணதாபா காயமடைந்தார். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கின் விசாரணை ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களில், சயான், வாளையார் மனோஜ், நிபந்தனை ஜாமினில் உள்ளனர். மற்ற 8 பேர் ஜாமினில் உள்ளனர்.

கடந்த 17 ம் தேதி, நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் ஊட்டி, மாவட்ட குற்ற பிரிவு போலீஸ் அலுவலகத்தில், நீலகிரி எஸ்.பி.ஆசிஷ் ராவத் தலைமையில், டி.எஸ்.பி., சுரேஷ், வழக்கின் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலையில் சயானிடம் 3 மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணையில், அ.தி.மு.க., வை சேர்ந்த முக்கிய நபர்கள் குறித்து தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக கவர்னரிடமும் மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, சயான் ஆஜரானார். அரசு சிறப்பு வக்கீல்களான ஷாஜகான், கனகராஜ் ஆகியோரும் ஆஜரானார்கள். சயானிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படவில்லை.
35 வது சாட்சியான அ.தி.மு.க., நிர்வாகி, அனுபவம் ரவியிடம் கூடுதல் தகவல் பெற, போலீசார் சம்மன் அனுப்பினர். தன்னிடம் மறுவிசாரணை நடத்த கூடாதென தடை கோரி, சென்னை ஐகோர்ட்டில் அனுபவம்ரவி தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்த கூடாதென சாட்சிகள் தரப்பு வக்கீல் அனந்தகிருஷ்ணன் நீதிபதி சஞ்சய் பாபாவிடம் அனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, வழக்கை 2 ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதில், 2ம் தேதி எஸ்டேட் மேலாளர் நடராஜன், 3ம் தேதி கோத்தகிரி மின்வாரிய செயற்பொறியாளர், 4ம் தேதி, தடயவியல் நிபுணர் ராஜ்மோகன் ஆகியோரிடம் விசாரிக்க உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE