புதுடில்லி:கடந்த ஏழு ஆண்டுகளில், மத்திய அரசு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையை உயர்த்தி, 23 லட்சம் கோடி ரூபாய் ஈட்டியுள்ளதாக, காங்., - எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராகுல் அளித்த பேட்டி:மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு என்றால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது என்ற புதிய சித்தாந்தத்தை மத்திய அரசு பின்பற்றுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், மத்திய அரசு, பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை உயர்த்தியதன் வாயிலாக, 23 லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. இந்த பணம் எங்கே போனது என, மக்கள் கேட்கின்றனர்.
ஒரு புறம் பணத்தின் மதிப்பை இழக்கச் செய்து, மறுபுறம் பணத்தின் மதிப்பை உயர்த்தும் கொள்கையை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. இதன்படி, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், அமைப்பு சாரா துறையினர், குறு, சிறு, நடுத்தர தொழில்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், ஊதியதாரர்கள், நேர்மையான தொழிலதிபர்கள் ஆகியோரின் பணம் மதிப்பிழந்துள்ளது.
மறுபுறம், பிரதமர் மோடிக்கு நெருக்கமான நான்கு அல்லது ஐந்து நண்பர்களின் சொத்து மதிப்பு மிகப் பெரிய அளவில் உயர்ந்து வருகிறது.ஏழைகளிடம் உள்ள செல்வம், பணக்காரர்களுக்கு செல்கிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத பீதியில், பா.ஜ., அரசு, எரிபொருள் விலையை உயர்த்தி, ஆட்சி நடத்தி வருகிறது.
காங்., ஆட்சியில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, 410 ரூபாயாக இருந்தது. இது தற்போது, 885 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், ஒரு லிட்டர் பெட்ரோல், 71 ரூபாயில் இருந்து 101 ரூபாயாகவும், டீசல், 57 ரூபாயில் இருந்து, 88 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE