தூத்துக்குடி: 'எதிர்க்கட்சியாக இருந்தபோது மத்திய அரசை எதிர்த்த திமுக.,வினர் இப்போது புரிந்து கொண்டு ஒன்றிணைந்து செயல்படுவதை போல, இன்னும் 3 மாதங்களுக்குள் வேளாண் சட்டங்களையும், நீட் தேர்வு விஷயத்திலும் தங்களை மாற்றிக்கொள்வார்கள்,' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்து 10 ஆண்டுகாலம் மத்திய அரசின் திட்டங்களை செயல்பாடுகளை கண்மூடிக்கொண்டு எதிர்த்து வந்தனர்.
தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் மோடி வந்தபோது ‛கோ பேக் மோடி' என டிரெண்ட் செய்த திமுக.,வினர், இன்று அதே திட்டம் தமிழகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என குறிப்பிட்டு அந்த திட்டத்தின் மூலமாக 2000 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

அதுபோல கொரோனா தடுப்பு பணிக்கு தமிழகத்திற்கு சரியான அளவில் தடுப்பூசி ஒதுக்காமல் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்வதாக திமுக.,வினர் விமர்சித்தனர். ஆனால், தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேவைக்கு அதிகமாக தடுப்பூசியை மத்திய அரசு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
எனவே, முன்னர் எதிர்கட்சியாக இருந்து விமர்சித்த திமுக.,வினர் மத்திய அரசை புரிந்து ஒன்றிணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளனர். இதுபோலவே, இன்னும் 3 மாதங்களுக்குள் வேளாண் சட்டங்களையும், நீட் தேர்வு விஷயத்திலும் தங்களை மாற்றிக்கொள்வார்கள் என நம்புகிறோம்.

பெட்ரோல் விலை, கேஸ் விலை உயரும் போது மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த விலையை மிக விரைவாக முறைப்படி கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மிக வேகமாக இந்த விலை கட்டுக்குள் வரும். இந்த விலை உயர்வுக்கு நிரந்தர தீர்வாக உள்நாட்டில் அசாம், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் எரிவாயு உற்பத்தியை பெருக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.