சென்னை : மோசடியாக பதிவு செய்யப்பட்ட சொத்து விற்பனை பத்திரங்களை ரத்து செய்ய, பதிவாளருக்கும், பதிவுத்துறை தலைவருக்கும் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று நிறைவேறியது.தமிழகத்தில், ஒருவர் பெயரில் உள்ள வீடு, மனை போன்ற சொத்துக்களை, அவருக்கு தெரியாமல், மோசடி பத்திரம், ஆள்மாறாட்டம் வாயிலாக பதிவு செய்வது அதிகரித்து வருகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்து வழக்கு பதிவானாலும், மோசடியாக பதிவான பத்திரம் ரத்து செய்யப்படுவது இல்லை.

இதனால், சொத்து வைத்துள்ள உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வாக, மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்கான சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.மோசடி பத்திரங்கள் குறித்த புகார்களை பதிவாளர் விசாரித்து, சம்பந்தப்பட்ட நபர்களிடம் விளக்கம் கேட்கலாம். அதன் அடிப்படையில், அந்த குறிப்பிட்ட பத்திரத்தை ரத்து செய்து பதிவாளர் உத்தரவிடலாம்.இது தொடர்பான மேல் முறையீடு மனுக்களை, பதிவுத்துறை தலைவர் விசாரித்து, 30 நாட்களுக்குள் பத்திரம் ரத்து குறித்த உத்தரவை பிறப்பிக்கலாம்.இதன் பின், இந்த உத்தரவு மீது ஆட்சேபம் இருந்தால், 30 நாட்களில் அரசிடம் மேல்முறையீடு செய்யலாம். இதற்காக, பதிவு சட்டத்தில், '77ஏ, பி' என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இச்சட்ட மசோதா சட்டசபையில் நேற்று நிறைவேறியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE