மேட்டுப்பாளையம்:''காந்தை ஆற்றில் பரிசல் மற்றும் மோட்டார் படகில் பயணம் செய்யும், மாணவ, மாணவியர், பொதுமக்கள், கட்டாயம் லைப் ஜாக்கெட் அணிய வேண்டும்,'' என, பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.சிறுமுகை அடுத்த லிங்காபுரத்துக்கும், காந்தவயலுக்கும் இடையே காந்தை ஆறு ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே, 2005ம் ஆண்டு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்மட்டத்தை கணக்கிடாமல், காந்தை ஆற்றின் நீர்மட்டத்தை மட்டுமே கணக்கிட்டு பாலம் கட்டியுள்ளனர். இதனால் பவானிசாகர் அணையில், 96 அடிக்கு நீர்மட்டம் உயரும்போது, அணையின் தேக்க நீரில், காந்தை ஆற்றின் உயர்மட்ட பாலம் மூழ்கும். தற்போது காந்தை ஆற்றில், 30 அடிக்கும் மேல் நீர் தேங்கியுள்ளது. அதனால், காந்தவயல், காந்தையூர், மொக்கை மேடு, உளியூர், லிங்காபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மலைவாழ் கிராம மக்கள் பரிசல்கள் மற்றும் மோட்டார் படகு வாயிலாக ஆற்றை கடந்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்ட கலெக்டர் சமீரன், பரிசல் மற்றும் மோட்டார் படகு வாயிலாக பயணம் செய்யும் மாணவ, மாணவியர், பொதுமக்கள் பாதுகாப்பு கவசமான லைப் ஜாக்கெட்டை கட்டாயம் அணிய வேண்டும் என, அறிவுரை வழங்கி உள்ளார்.சிறுமுகை பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி கூறியதாவது:பரிசலில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் லைப் ஜாக்கெட் அணியும் படி, மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கி உள்ளார். இதையடுத்து, நான்கு பரிசல்கள், ஒரு மோட்டார் படகுக்கு மொத்தமாக, 15 லைப் ஜாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. பரிசல்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை, பரிசல், படகு ஓட்டுபவர்கள், லைப் ஜாக்கெட் அணிய வைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE