சண்டிகர் :''கட்சியில் அனைத்தும் சரியாக நடக்கிறது என்று சொல்ல முடியாது; சில பிரச்னைகள் உள்ளன. அதை மறைக்க வேண்டிய அவசியமில்லை,'' என, காங்.,கின் பஞ்சாப் மாநில பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் கூறியுள்ளார்.
பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், இருவரும் பரஸ்பரம் புகார் கூறி வருகின்றனர்.இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக மாநில பொறுப்பாளரும், உத்தரகண்ட் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் சண்டிகர் விரைந்தார். கடந்த சில நாட்களாக அமரீந்தர் சிங், சித்து உட்பட பலரையும் அவர் சந்தித்து பேசியுள்ளார்.
அடுத்த வாரத்தில் கட்சித் தலைமையை சந்திக்க உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் ராவத் கூறியுள்ளதாவது:கட்சியில் அனைத்தும் சரியாக நடக்கிறது என கூற முடியாது. சில பிரச்னைகள் உள்ளன. அதை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை.அமரீந்தர் சிங்கும், சித்துவும் ஏற்கனவே பேசி, தங்களுக்கு இடையே இருந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர். மீண்டும் அதுபோல் இருவரும் நேரில் சந்தித்து பேசினால் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுவிடும் என உறுதியாக நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE