மதுரை:''தி.மு.க., அரசு ஆட்சியின் தோல்விகளை மறைப்பதற்கு பொதுத் துறை நிறுவனங்களை விற்பதாக மத்திய அரசை தவறாக சித்தரிக்க முயற்சிக்கிறது,'' என, பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலர் இப்ராஹிம் குற்றம் சாட்டினார்.
புதிதாக பொறுப்பு ஏற்ற மதுரை ஆதீனத்தை மதநல்லிணக்கம் ஏற்படுத்தும் வகையில் சந்தித்த இப்ராஹிம் கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ., மட்டுமே மதவாத சக்திகளுக்கு எதிராக ஹிந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களை ஓரணியில் சேர்த்து அனைவரும் பாரத தாயின் புதல்வர்கள் என்ற சரியான வழிகாட்டுதல்களை தருகிறது.
பொதுத் துறை நிறுவனங்களை மத்திய அரசு விற்பதாக தவறான பிரசாரத்தை தி.மு.க.,வினர் செய்கின்றனர். பொதுத் துறை நிறுவனங்களை மத்திய அரசு குத்தகைக்குதான், விடுவதாக மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவுபடுத்திஇருக்கிறார்.
கடந்த, 2008ல் மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது மும்பை - புனே நெடுஞ்சாலை திட்டம் தற்போதைய நடைமுறை படி தனியாருக்கு வழங்கப்பட்டது. அன்றைக்கு எதிர்க்காத தி.மு.க., இன்று அரசியல் உள்நோக்கத்திற்காக எதிர்க்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE