ஓசூர்:ஓசூரில் 6 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட வடமாநில தொழிலாளியை மீட்ட போலீசார், சிறுவன் உட்பட இருவரை கைது செய்தனர்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் சோனுராஜ்பூர், 27; கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை அங்குள்ள மைதானத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு பழக்கமான, பீஹாரை சேர்ந்த பிரின்ஸ்குமார், 19, என்பவர் தன் அறைக்கு வரும்படி அழைத்துச் சென்றார்.
அங்கு, 17 வயது சிறுவனுடன் சேர்ந்து, சோனுராஜ்பூரின் கைகளை கட்டி போட்டு தாக்கினார். பின், உத்தர பிரதேசத்திலுள்ள அவரது அண்ணன் சைலேந்திராவிற்கு போன் செய்து, சோனுராஜ்பூரை கடத்தி வைத்திருப்பதாகவும், 6 லட்சம் ரூபாய் கொடுத்தால் விடுவோம், இல்லாவிட்டால் கொன்று விடுவோம் என மிரட்டினர்.
தன்னிடம், 6 லட்சம் ரூபாய் இல்லை என அவர் கூறியதால், கடைசியாக 3 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த சைலேந்திரா, தன் தம்பி பணியாற்றும் நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்படி, ஓசூர் டி.எஸ்.பி., முரளி, சிப்காட் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினர்.
சோனுராஜ்பூரை கடத்தியவரை, அவரது 'மொபைல்போன் டவர்' சிக்னல் வாயிலாக அறிந்தனர். நேற்று காலை அங்கு சென்ற போலீசார், பிரின்ஸ்குமார் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து, அவர்களிடமிருந்து சோனுராஜ்பூரை மீட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE