மதுரை:'கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், பள்ளிகளை மூட வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வலியுறுத்தப்பட்டது.
திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் வகாபுதீன் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு செப்., 1 முதல் நேரடி வகுப்புகளை துவங்க அரசு அனுமதித்தது. கொரோனா மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளது. நேரடி வகுப்பு மட்டுமன்றி, 'ஆன்லைன்' வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்ய, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனு செய்தார்.
ஆக., 31ல் தமிழக அரசுத் தரப்பு, 'பல நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின், மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.
'இடையூறின்றி ஆன்லைனிலும் வகுப்புகள் தொடரும். நேரடி வகுப்பில் பங்கேற்குமாறு மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்' என தெரிவித்தது.பதில் மனு செய்ய உத்தரவிட்டு, நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது. 'நேரடி வகுப்பிற்கு வர விருப்பமில்லாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கலாம்' என, தமிழக அரசு பதில் மனு செய்தது.மனுதாரர் தரப்பு: தஞ்சாவூர், நெய்வேலியில் சில மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் பரவ வாய்ப்புள்ளது. பள்ளி களை மூட வேண்டும்.தமிழக அரசுத் தரப்பு: பாதிப்பின் அளவு குறைந்து வருகிறது.
நீதிபதிகள்: மனுதாரர் கோரிய நிவாரணத்திற்கு தீர்வு ஏற்பட்டு, வழக்கு முடிவுக்கு வந்து விட்டது. வேறு நிவாரணம் தேவையெனில் தனி மனு செய்யலாம்.மனுதாரர் தரப்பு: பள்ளிகளை மூட உத்தரவிடக் கோரி தனி மனு செய்ய அவகாசம் தேவை.இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதிகள் செப்., 30ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE