லாகூர் : பாகிஸ்தானில் விநாயகர் கோவில் இடிக்கப்பட்ட வழக்கில் கைதான 85 பேர் மீதான விசாரணை, பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று துவங்கியது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹீம் யார்கான் மாவட்டம் போங் நகரில், பிரசித்த பெற்ற விநாயகர் கோவில் அமைந்துள்ளது.சமீபத்தில் இந்த கோவில் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. கோவிலின் சில பகுதிகளை தீ வைத்து எரித்த அவர்கள், கடவுள் சிலைகளையும் உடைத்தனர்.
அங்குள்ள முஸ்லிம் பள்ளியில் சிறுநீர் கழித்ததால் கைதான 8 வயது ஹிந்து சிறுவனை, நீதிமன்றம் ஜாமினில் விடுவித்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்தது. கோவிலை சேதப்படுத்திய வழக்கில் 85 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தாக்குலுக்கு உள்ளான கோவிலை சீரமைக்கும் பணிகள் அரசு தரப்பில் உடனடியாக துவங்கியது.

இதற்கான செலவு தொகையை கைதானவர்களிடம் இருந்து வசூலிக்கும்படி பாக்., உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அவர்களிடம் இருந்து அரசு தரப்பில் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இழப்பீடு தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது. கோவில் மீதான தாக்குதல் வழக்கில் கைதான 85 பேர் மீதான குற்றப்பத்திரிகையை பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணை நேற்று துவங்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE