சென்னை:நாகை மாவட்டம் நாகூர் தர்காவைச் சேர்ந்த, புனித குளத்தில் ஆக்கிரமிப்பு புகார் குறித்து, தாசில்தார் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடவடிக்கை
நாகூரைச் சேர்ந்த சாஹா சையது சாகிபு என்பவர் தாக்கல் செய்த மனு:நாகூர் தர்கா வளாகத்தில் புனித குளம் உள்ளது. சாலை விரிவாக்கத்துக்காக, மூன்று புறமும் உள்ள தர்கா குளத்தின், நிலப் பரப்பை குறைக்கின்றனர். இது, நீர் நிலையை ஆக்கிரமிப்பு செய்வதாகும்.
இது குறித்து, அரசுக்கு மனு அனுப்பினேன்; எந்த பதிலும் இல்லை. பழமை, தொன்மை வாய்ந்த தர்கா புனித குளத்தின் அளவை சுருக்கக் கூடாது. வேறு எந்த திட்டப் பணிக்காகவும், குளத்தின் கரையை நிலப் பரப்பை ஆக்கிரமிக்கக் கூடாது.எனவே, தர்கா புனித குளத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். புனிதமான நீர் நிலை அழிக்கப்படுவதை தடுக்க, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் பிரகாஷ் வெங்கட்ரமணி, அரசு தரப்பில், அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகினர். முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:நீர் நிலைகள், வனங்களை அழிக்கவோ, பரப்பை குறைக்கவோ கூடாது என்று பலமுறை அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
'நாகை தாசில்தார், இந்தப் பிரச்னையை கவனிப்பார்' என்று அரசு பிளீடர் தெரிவித்து உள்ளார்.எனவே, புதிய மனுவை, 15 நாட்களுக்குள், நாகை தாசில்தாருக்கு மனுதாரர் வழங்க வேண்டும். சட்டப்படியான நடைமுறையை பின்பற்றி, மனுவை விசாரிக்க வேண்டும்.
'நோட்டீஸ்' நீர் நிலையில், அதைச் சுற்றி ஆக்கிரமிப்பாளர்கள் இருந்தால், 'நோட்டீஸ்' கொடுக்க வேண்டும். பழைய நிலையில் நீர் நிலையை மீட்பதை உறுதி செய்ய, தாசில்தார் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். 12 வாரங்களுக்குள், உரிய உத்தரவை பிறப்பித்து மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE