ஊட்டி: கொரோனா தடுப்பூசி முதல் தவணை, நுாறு சதவீதம் செலுத்தி, நீலகிரி மாவட்டம், மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது.
நீலகிரியில், பழங்குடியினருக்கு நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, தோட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் செலுத்தப்பட்டது. மொத்த மக்கள் தொகையான, 7 லட்சத்து, 24 ஆயிரத்து, 748 பேரில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5 லட்சத்து, 21 ஆயிரத்து, 60 பேர்.
நேற்று முன்தினம் நடந்த சிறப்பு முகாமில், 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்படி, முதல் தவணை தடுப்பூசி, 5 லட்சத்து 14 ஆயிரத்து 783 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டு, 3 மாத காலத்துக்குள் உள்ள, 6,277 பேர், விதிகளின்படி தடுப்பூசி செலுத்தவில்லை.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''கொரோனா முதல் தவணை தடுப்பூசி மாநில அளவில், நீலகிரியில் நுாறு சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசியை, குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தி கொள்ள வேண்டும்.மாநில எல்லையில் 'நிபா வைரஸ்' கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE