சமீப காலமாக, பணியில் ஈடுபட்டிருக்கும் அரசு அதிகாரிகளை, குறிப்பாக காவல் துறை அதிகாரிகளை மிரட்டுவதும், அவர்களிடம் தகராறு செய்வதும் அதிகமாகி வருகிறது.இன்னும் சிலர், காவல் அதிகாரிகள் முன் தற்கொலை செய்து கொள்ள முயற்சிப்பது போன்ற தவறான செய்கைகளில் ஈடுபடுகின்றனர். மக்களில் சிலருக்கு ஏன் இந்த மனநிலை வந்தது? அரசின் சார்பாக சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? சூரியனின் மகத்துவம் சுட்டெரிக்கும் அதன் வெப்பத்தில் இல்லை; சிறிய மலரையும் அற்பமாக கருதாமல், அக்கறையோடு மலர வைக்கும் அதன் ஆற்றலில் இருக்கிறது.
கசப்பான உண்மை
அதிகாரி என்ற பொறுப்பில் இருப்போர், தங்களை நாடி வரும் மக்களை அலட்சியப்படுத்தியும், கடுமை காட்டியும், தம் பதவியின் உச்சத்தைக் காட்ட வேண்டும் என்பதில்லை.தம்மை நாடி வருவோரின் குறைகளை அக்கறையோடு கேட்டு, உரிய நடவடிக்கை எடுத்து, வந்தவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துபவர் தான், அதிகாரி என்ற பதவிக்கு பெருமை தேடித் தருபவர்.தங்களின் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்தவர்கள் மட்டுமே, தலைமை பொறுப்பில் இருக்கத் தகுதியானவர்கள். அப்படி தகுதியானவர்கள் மிகச் சிலர் தான் இருக்கின்றனர் என்பது தான் கசப்பான உண்மை.மக்கள் அந்த சிலரை தெய்வமாக மதிக்கின்றனர்; போற்றுகின்றனர். அத்தகைய அதிகாரிகளுக்கு பதவி மாற்றம் ஏற்படும் போது வருத்தமும், எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர்.அதே வேளையில், தங்களை அலட்சியப்படுத்தும் அதிகாரிகளை மக்கள் மதிப்பதில்லை. மேலும், சந்தர்ப்பம் கிடைக்கும் போது தங்களின் முழு எதிர்ப்பையும் தெரிவிக்க தயங்குவதில்லை.
நடவடிக்கை
தங்கள் அலுவலகத்துக்கு கோரிக்கையுடன் வரும் மக்களுக்கு, உரிய முக்கியத்துவம் கொடுக்காததன் விளைவு, பிரச்னைகள் பெரிதாகி, மக்களிடமே பேசி தீர்வு காண வேண்டிய கட்டாய சூழ்நிலை அந்த அதிகாரிகளுக்கு ஏற்பட்டு விடும்.உயர் பொறுப்பில் இருப்பவர்கள், தங்களின் கீழ் பணியாற்றும் அலுவலர்களில், வரம்பு மீறி செயல்படுபவர்களை கட்டுக்குள் வைக்கவும், ஆற்ற வேண்டிய பணியில் அலட்சியம் காட்டுபவர்களை கண்டிக்கவும் கடமைப்பட்டுள்ளனர்.
'அவர்களின் தவறுக்கு நான் பொறுப்பல்ல' எனக் கூறி, தப்பித்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. ஒரு சீரிய மேற்பார்வையின் கீழ், கூட்டாக செயல்படும் பணியில், அவரவர் தவறுகளுக்கு அவர்களே பொறுப்பு எனக் கை காட்டி விட்டு, ஒதுங்கி நிற்க முடியாது.அப்படி செயல்படுபவர்கள், உயர் பொறுப்புக்கு தகுதியற்றவர்கள். யாராவது ஒரு மேலிடத்தின் தலையீடு அல்லது சிபாரிசு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பவர்கள் சிலர் உள்ளனர்.அவர்கள், கட்டளை களை ஏற்று நடக்கும் பணியாளர்களாகத் தான் இருக்க முடியுமே தவிர, சுயமாக சிந்தித்து செயல்படும் தலைமைப் பொறுப்பு அதிகாரியாக இருக்க தகுதியற்றவர்கள்.
தன் அறிவுக்கும், திறமைக்கும் அநீதி இழைக்காமல் செயல்படுபவர்கள், தனக்கு கீழ் பணியாற்றுபவர்களின் திறமையை பாராட்டும் பரந்த உள்ளம் கொண்டவர்கள் தான் தலைமைப் பதவிக்கு தகுதியானவர்கள்.'அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்' என, தன் குழந்தையை பசியில் கதற விட்டு பாலுாட்டும் தாயை விட, பசி நேரத்தை உணர்ந்து, குழந்தை அழத் துவங்கும் முன் பாலுாட்டுபவரே பாசமுள்ள தாய். ஆனால், இங்கு எப்படி அழுவது என்று தெரியாத, எப்படி அழுதும் கவனத்தை ஈர்க்க இயலாத பல குழந்தைகள், பசியால் துடித்துக் கொண்டிருக்கின்றன.
மனதில் இடம்
சாதாரண நிலை அதிகாரிகள் மட்டத்தில் நடக்க வேண்டிய பணிகளுக்கு, மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், அமைச்சர், முதல்வர், நீதிமன்றம் என குடிமகனை அலைய விட்டால், நிர்வாகம் சீர்கெட்டு போயுள்ளது என்று தான் அர்த்தம்.அங்கு, ஒவ்வொரு மட்டத்திலும் தலைமைப் பொறுப்பை ஏற்று, அந்த பொறுப்பில் அமர்ந்து இருப்பவர்கள் அந்த பதவிக்கு தகுதியற்றவர்கள்.இப்போதெல்லாம், பாதிக்கப்பட்டோரின் குரல் ஓங்கி ஒலித்து, ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டால் அல்லது பொதுமக்கள் சாலை மறியல் போன்ற போராட்டங் களில் ஈடுபட்டால் மட்டுமே நடவடிக்கை முழு வீச்சில் எடுக்கப்படுகிறது.
அதன் பின்னணியில், பல நேர்மையற்ற, மனிதாபிமானமற்ற அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களை அடையாளம் கண்டு, தண்டிக்கும் பொறுப்புள்ள தலைமைகள் உறங்கிக் கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.பல அதிகாரிகள் மேலதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசுவதற்கு கூட அஞ்சுகின்றனர். பிரச்னைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள், பிரச்னைகளை சந்திக்கவே அஞ்சுகின்றனர்.
துணிச்சலாகவும், சுயமாகவும் முடிவெடுக்கும் அதிகாரிகளுக்கு உதாரணமாக, 'சந்தனக் கடத்தல்' வீரப்பனின் ஆட்டத்தை முடிவு கட்டிய விஜயகுமார் ஐ.பி.எஸ்., போன்றவர்கள், மக்களின் மனதிலும், காவல் துறையில் பணியாற்றுவோரின் மனதிலும் இடம் பெற்றுள்ளனர். புத்தகங்களில் உள்ள சட்டமும், நிர்வாக விதிமுறைகளும், அதை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் செயல்பட வேண்டிய முறைகளும் பொதுவானவை, நிலையானவை. அப்படி இருக்கும் போது, சில அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு பாராட்டைப் பெறுவதும், சில அதிகாரிகள் தவறாக செயல்பட்டு, நடவடிக்கைக்கு உள்ளாவதும், நிர்வாக சீர்கேட்டின் வெளிப்பாடு தானே!
சாதாரண மக்களும் எளிதாக சந்தித்து, தங்கள் குறைகளை தெரிவிக்கும் அளவுக்கு அணுகுமுறையை அமைத்துக் கொண்டவர்கள் தான், மக்களின் குறைகளைக் களைந்து அவர்களின் நன்மதிப்பைப் பெற முடியும்.
அச்சம்
ஒரு உயர் அதிகாரியிடம், தன் கோரிக்கையுடன் சென்று சந்தித்து திரும்பிய ஒரு சாதாரண குடிமகன், 'அதிகாரி மிகவும் எளிமையாக இருக்கிறார். 'மிகவும் அன்பாகவும், நட்பாகவும், கவனத்துடனும் குறைகளைக் கேட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்' என்று சொன்னால், அது இப்போது மிக அரிதான ஒரு நிகழ்வே.
தன்னை அணுகி குறைகளைச் சொல்பவர்களை, தங்களின் அறிவார்ந்த சொற்களாலும், உடனடி நடவடிக்கையாலும் அமைதிப்படுத்த வேண்டுமே தவிர, அதிகாரத்தாலும், ஆத்திரமிக்க சொற்களாலும், அடக்கிப் போடுவது பொறுப்பான அதிகாரிகளுக்கு அழகல்ல.நியாயமும், உண்மையும் தெரிந்தாலும் அதைத் தயங்காமல் வெளிப்படுத்தும் துணிவு, 99 சதவீத அதிகாரிகளுக்கு இல்லை.
கீழ்மட்டத்தில் நிகழும் அவலங்களை மறைத்து, தலைமையிடம் பெயர் வாங்க, போலியான தகவல்களைத் தரவும் சிலர் தயங்குவதில்லை. அப்படி செய்தால், நம்மை சந்தேகிப்பர் என்ற அச்சம்அவர்களுக்கு.அதனால், ஒரு நியாய மான முடிவுக்கு கூட, பொறுப்பு ஏற்றுக் கொள்ள துணிவில்லாத ஒரு அவலம் பல அதிகாரிகளிடம் காணப்படுகிறது. இதனால், பல நேரங்களில் அப்பாவிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயம் முடக்கிப் போடப்பட்டிருக்கிறது.ஒரு வியாபார நிறுவனத்திற்கு பொருள் வாங்க வரும் வாடிக்கையாளருக்கும், ஒரு அரசு அலுவலகத்துக்கு நியாயமான நடவடிக்கை கோரி வரும் பொதுமக்களுக்கும் வேறுபாடில்லை.
சரித்திரங்கள்
வாடிக்கையாளர் வாங்க வருவது பொருட்களை; மக்கள் வாங்க வருவது அரசு அலுவலரின் சேவையை. பொருட்களுக்கான விலை, வாங்கும் போது கொடுக்கப்படுகிறது. சேவைக்கான வரி, முன்னதாக செலுத்தப் பட்டு விடுகிறது.வரி செலுத்திய எல்லாருக்கும் எல்லா சேவையும் தேவைப்படுவதில்லை.காந்தியடிகள், வாடிக்கையாளர்கள் பற்றி குறிப்பிட்டது இங்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.'சேவை நாடி நம் இடத்திற்கு வருபவரே நமக்கு மிக முக்கியமானவர். அவர் நம்மை நம்பி இல்லை; நாம் தான் அவரை நம்பி இருக்கிறோம்.'நம் பணியில் அவர் குறுக்கிடவில்லை. நம் வேலைக்கு ஆதாரமானவர் அவர் தான். அவர் நம் சேவைக்கு அன்னியரல்லர்; அவர் அதன் பங்கேற்பாளர்.
'அவருக்கு பணி செய்வதன் வாயிலாக நாம் அவருக்கு உதவி செய்யவில்லை. சேவை செய்ய வாய்ப்பளிப்பதன் வாயிலாக அவர் தான் நமக்கு உதவி செய்கிறார்' என, அவர் குறிப்பிடுகிறார்.அரசு அதிகாரிகளால் அலட்சியப்படுத்தப்பட்ட, அவமானப்படுத்தப்பட்ட ஒரு சில இளைஞர்கள் உத்வேகத்தோடு படித்து, மாவட்ட ஆட்சியராக வந்த சரித்திரங்களும் உள்ளன.ஆனால், அவர்களாவது தங்களின் அனுபவம் யாருக்கும் ஏற்படக் கூடாது என்ற உறுதியோடு, வேலையில் சேர்ந்த பின் செயல்படுகின்றனரா என்பது தெரியவில்லை.
காந்தியடிகள், அம்பேத்கர் போன்றோர் உருவாக காரணமாக அமைந்தது கூட, அப்போது இருந்த சில அரசு அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயல்பாடுகள் தான். ஆனாலும் எல்லாருக்கும் அந்த மகான்களைப் போல பொறுமையும், சகிப்புத்தன்மையும், தியாக மனப்பான்மையும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.
எதிர்பார்ப்பு
தமிழகத்தில் ஏற்பட்டு உள்ள புதிய ஆட்சியில், தலைமை செயலராக பதவி ஏற்றுள்ள இறையன்பு, காவல் துறை இயக்குனராகப் பதவி ஏற்றுள்ள சைலேந்திரபாபு ஆகியோர், பதவிக்கு வருவதற்கு முன்பே தங்களது எழுத்தாலும், பேச்சாலும், மனிதாபிமானம் மிக்க செயல்பாடுகளாலும் மக்களின் மனதில் சிறந்த இடத்தைப் பிடித்தவர்கள். புதிய அரசால் அவர்கள் பதவி அமர்த்தப்பட்டனர் என்பதை விட, மக்களால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
எனவே, அவர்கள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இருக்கிறது. தற்போது மக்களின் தேவைகளையும், அதற்கு சற்றும் பொறுத்தமற்ற வகையில் செயல்படும் பல அதிகாரிகளின் செயல்திறனையும் மாற்ற வேண்டும் என, மக்கள் இந்த அதிகாரிகளிடம் எதிர்
மா.கருணாநிதி
காவல் துறை கண்காணிப்பாளர்,ஓய்வு
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:
இ-மெயில்: spkaruna@gmail.com
மொபைல் 98404 88111