சென்னை : அரசு பஸ் கண்டக்டர்களை கேவலப்படுத்தும் வகையில் பேசிய, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரின் சர்ச்சை பேச்சை கண்டித்து தொடர் போராட்டம் நடத்த, போக்குவரத்து துறை ஊழியர் சங்கங்கள் தயாராகி வருகின்றன.
தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், தனக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். பலரும் அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.இந்நிலையில், மூத்த அமைச்சரான துரைமுருகன், வேலுார் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.அப்போது அவர், 'நகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவித்துள்ளோம். பெண்கள் பஸ்சில் ஏறியதும், அப்படிப் போய் உட்காரு என கண்டக்டர்கள் கூறுகின்றனர்.
'அப்படிப்பட்டவர்களை, பெண்கள் முறத்தால் அடிக்க வேண்டும். அரசு பஸ் என்ன அவங்க அப்பன் வீட்டு சொத்தா... பெண்களை தரக்குறைவாக நடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை வேலையை விட்டு அனுப்பி விடுவோம்' என்றார்.தங்களை கேவலப்படுத்தி பேசிய துரைமுருகனை கண்டித்து, தஞ்சையில் உள்ள ஜெபமாலைபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக நகர பணிமனையில், நேற்று காலை 5:00 மணி முதல், டிரைவர்கள், கண்டக்டர்கள், பஸ்களை இயக்காமல் வேலை நிறுத்தப் போராட்டம்
நடத்தினர்.அதில், தி.மு.க.,வின் தொ.மு.ச., உட்பட அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். தகவல் அறிந்ததும், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டோரை சமாதானப்படுத்தி பஸ்களை இயக்க வைத்தனர்.
இதனால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பஸ் சேவை பாதிக்கப்பட்டதால், பயணியர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோல, மாநிலம் முழுதும் உள்ள பஸ் பணிமனைகளில் கண்டக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பஸ் சேவை பாதிக்கப்பட்டது.மூத்த அமைச்சரும், முதல்வருக்கு அடுத்த நிலையில் இருப்பவருமான துரைமுருகனின் பேச்சைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்த, போக்குவரத்து துறை தொழிலாளர் சங்கங்கள் தயாராகி வருகின்றன. இதனால், பஸ் சேவை முடங்கி, மக்கள் பாதிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இது குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், ஏ.ஐ.டி.யு.சி., போக்குவரத்து தொழிற் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:'அரசு போக்குவரத்து கழக நடத்துனர்களை, பெண்கள் முறத்தால் அடித்து விரட்ட வேண்டும்' என்றும், 'தவறு செய்பவர்கள் பற்றி புகார் செய்தால், உடனே பணி நீக்கம் செய்வோம்' என்றும், மூத்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாக செய்தி வந்துள்ளது.
இது, மிகவும் வருத்தமடைய செய்கிறது.
கொரோனா காலத்திலும் மக்கள் நலன் கருதி அஞ்சாமல் பணிபுரிந்த போக்குவரத்து ஊழியர்கள், அமைச்சரின் பேச்சால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.இந்தியாவிலேயே மிகச் சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கியதற்காக, தமிழக போக்குவரத்து கழகங்கள் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளன. இவை அனைத்தும் ஊழியர்களின் ஒத்துழைப்பால் கிடைத்தவை. எனவே, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள மன காயத்தை அகற்றும் பொருட்டு, அமைச்சர் தன் வார்த்தையை திரும்ப பெறுவார் என நம்புகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.