ஊட்டி:கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு அக்., 29க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், போலீசார் கூடுதல் விசாரணை நடத்த தடையில்லை என, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான சயான், சில தகவல்களை போலீசாரிடம் அளித்தார். தொடர்ந்து தனிப்படை போலீசார், முக்கிய சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர்.
ஆக., 27ல் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனிப்படை போலீசார் விசாரணை நடத்த கூடுதல் அவகாசம் கேட்டு மனு அளித்தனர். நீதிமன்றம் நான்கு வார கால அவகாசம் அளித்தது. நேற்று வழக்கு விசாரணை துவங்கியதும் அரசு வக்கீல்கள், 'விசாரணைக்கு கூடுதல் அவகாசம் தேவை' என தெரிவித்தனர்.
இதற்கு அனுமதி அளித்து, நீதிபதி சஞ்சய் பாபா விசாரணையை அக்., 29க்கு ஒத்தி வைத்தார்.அரசு சிறப்பு வக்கீல் ஷாஜகான் கூறுகையில், ''இதுவரை 34 பேரிடம் போலீஸ் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மின்னணு ஆதாரங்களை சேகரித்து வருகிறோம். தற்போது வரை நடந்த விசாரணை குறித்து 'சீல்' வைக்கப்பட்ட கோப்பை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE